இந்திய அணியின் இந்த செயல் மிகப் பெரும் சிக்கலை ஏற்படுத்தும்; இந்திய அணிக்கு அறிவுரை வழங்கிய முத்தையா முரளிதரன் !!

இலங்கை அணியின் முன்னாள் ஜாம்பவான் முத்தையா முரளிதரன் இந்திய அணி பும்ராவை அதிகம் சார்ந்துள்ளதாக பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது பேசியுள்ளார்.

நடப்பு டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், தனது முதல் போட்டியிலேயே பாகிஸ்தானை எதிர்கொண்ட விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, பாகிஸ்தான் அணியிடம் மிக மோசமான தோல்வியை தழுவியது. பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலுமே சொதப்பியதால் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடையும் நிலை ஏற்பட்டது.



பாகிஸ்தான் அணி அடுத்தடுத்த மூன்று போட்டிகளில் தொடர் வெற்றி பெற்று அரையிறுதி சுற்றுக்கே தகுதி பெற்றுவிட்ட நிலையில், இந்திய அணிக்கோ இரண்டாவது போட்டியே நாளை (அக்.,31) தான் நடைபெற உள்ளது. கிட்டத்தட்ட வாழ்வா சாவா போட்டியாக பார்க்கப்படும் இந்த போட்டியில் இந்திய அணி நியூசிலாந்தை எதிர்கொள்ள உள்ளது.

இந்தியா பாகிஸ்தான் இடையேயான போட்டிக்காக காத்திருந்ததை போன்றே, நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டிக்காகவும் ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களும் மிகுந்த ஆவலுடன் காத்துள்ளனர். மேலும் நாளை நடக்கவிருக்கும் போட்டி குறித்தான சுவாரஸ்யமான விஷயங்களும் விவாதங்களும் கிரிக்கெட் வல்லுநர்கள் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மத்தியில் நடைபெற்று வருகிறது.

அந்தவகையில் இலங்கை அணியின் முன்னாள் ஜாம்பவான் முத்தையா முரளிதரன் பத்திரிகையாளர்களின் சந்திப்பின் பொழுது இந்திய அணி குறித்து பேசியுள்ளார்.

அதில் பேசிய அவர்,இந்திய அணியின் பந்துவீச்சு என் கவனத்தை இந்திய அணி பக்கம் திருப்பியுள்ளது, இந்திய அணி அந்த அணியின் வேகப்பந்துவீச்சாளர் பும்ராவை அதிகம் சார்ந்துள்ளது,பும்ரா ஒரு மிகச் சிறந்த பந்துவீச்சாளர் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் கிடையாது, ஆனால் அவரை மட்டுமே நம்பிருப்பது சில சமயங்களில் சிக்கலை ஏற்படுத்திவிடும், இதனால் இந்திய அணி ஒரு லெக் ஸ்பின்னர் அல்லது இந்திய அணியின் அனுபவ வாய்ந்த சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் போன்ற ஏதாவது ஒரு மாற்றத்தை அணியில் கொண்டு வர வேண்டும் இப்படி செய்வது தான் இந்திய அணிக்கு பந்துவீச்சில் சம பலத்தை கொடுக்கும், மேலும் இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா மீண்டும் பந்துவீச ஆரம்பித்தால் அது இந்திய அணிக்கு கூடுதல் பலமாக அமையும் என்றும் முத்தையா முரளிதரன் பேசியுள்ளார்.

மேலும் பாகிஸ்தான் அணி குறித்து பேசிய முத்தையா முரளிதரன், பாகிஸ்தான் அணி நியூசிலாந்து,இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளை வீழ்த்தி தனது பலத்தை நிரூபித்து விட்டது, பாகிஸ்தான் அணி தற்பொழுது அபார திறமையுடன் திகழ்கிறது என்று பாகிஸ்தான் அணியை பாராட்டினார். மேலும் வெஸ்ட் இண்டீஸ் அணி கடந்த தொடர் போன்று இல்லாமல் இந்த தொடரில் மிக மோசமாக விளையாடுவதாக தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

Mohamed:

This website uses cookies.