கடைசி பந்து வரை பரபரப்பு… வங்கதேசத்தை வீழ்த்தி நூலிழையில் தப்பித்தது வெஸ்ட் இண்டீஸ் !!

வங்கதேச அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 3 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றுள்ளது.

டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் வங்கதேச அணியும், வெஸ்ட் இண்டீஸ் அணியும் மோதின.

ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணியின் கேப்டன் மஹ்மதுல்லாஹ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 142 ரன்கள் எடுத்தது.

இதனையடுத்து 143 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய வங்கதேச அணிக்கு அந்த அணியின் துவக்க வீரர்களான நயீம் 17 ரன்னிலும், ஷாகிப் அல் ஹசன் 9 ரன்னிலும் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தனர்.

இதன்பின் களத்திற்கு வந்து நீண்ட நேரம் போராடிய லிட்டன் தாஸ் 43 ரன்கள் எடுத்து கொடுத்தாலும், முக்கியமான நேரத்தில் விக்கெட்டை இழந்தததன் மூலம் வங்கதேச அணியின் வெற்றிக்கு கடைசி ஒரு ஓவரில் 13 ரன்கள் தேவை என்ற இக்கட்டான நிலை ஏற்பட்டது.

கடைசி ஓவரை வீசிய ஆண்ட்ரியூ ரசல் அந்த ஓவரில் வெறும் 9 ரன்கள் மட்டுமே விட்டுகொடுத்ததால் வங்கதேச அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை தவறவிட்டுள்ளது.

விண்டீஸ் அணி சார்பில் பந்துவீசிய அனைத்து பந்துவீச்சாளர்களும் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.

விண்டீஸ் அணிக்கு எதிரான இந்த தோல்வியின் மூலம் நடப்பு தொடரில் தனது மூன்றாவது தோல்வியை பதிவு செய்துள்ள வங்கதேசத அணி அரையிறுதி போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை கிட்டத்தட்ட இழந்துவிட்டது. அதே வேளையில் விண்டீஸ் அணி நூலிழையில் தப்பித்துள்ளது. அடுத்த போட்டிகளில் மிகப்பெரும் வெற்றி பெற்றால் மட்டுமே வங்கதேச அணிக்கு அடுத்த சுற்றுக்கான வாய்ப்பு கிடைக்கும்.

Mohamed:

This website uses cookies.