அணியின் வெளியிலிருந்து பேசும் உங்களுக்கு என்ன தெரியும்? நீங்கள் பேசுவதெல்லாம் குப்பைக்கு சமானம்! என்று கட்டமாக பேசிய ரோகித் சர்மா, ரவி சாஸ்திரிக்கு பதில் அடி கொடுத்துள்ளார்.
ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. 3 போட்டிகளின் முடிவில் இரண்டில் இந்திய அணியும் ஒரு போட்டியில் ஆஸ்திரேலிய அணியும் வெற்றி பெற்று தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையும் வகிக்கிறது.
முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ஆதிக்கத்தை செலுத்தி இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்றது. ஆனால் மூன்றாவது போட்டியில் அப்படியே தலைகீழாக மாறி இந்திய அணி படுதோல்வியை சந்தித்தது. மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவிய பிறகு கடுமையாக விமர்சித்த ரவி சாஸ்திரி,
“முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்ற மெத்தனத்துடன் ரோகித் சர்மா அணியினர் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடினர். வெற்றி பெற்று விடலாம் என்ற அதீத நம்பிக்கையுடன் இவர்கள் களமிறங்கியது, அவர்களது காலையே வாரிவிட்டது.” என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் நான்காவது டெஸ்ட் போட்டி வருகிற மார்ச் 9ஆம் தேதி துவங்குகிறது. அதற்கு முன்பாக பத்திரிகையாளர்கள் சந்திப்பில் ஈடுபட்டு பேட்டி அளித்த ரோகித் சர்மா, ரவி சாஸ்திரியின் இந்த கடும் விமர்சனத்திற்கு தனது காட்டமான பதிலை கூறியுள்ளார்.
ரோகித் சர்மா பேசியதாவது: “வெளியில் இருந்து பேசுபவர்களுக்கு அணிக்குள் என்ன நடக்கிறது என்பதே தெரியாது. அப்படியிருக்க மூன்றாவது டெஸ்ட் போட்டியில் நாங்கள் அதீத நம்பிக்கையுடன் விளையாடியது மட்டுமே தோல்விக்கான காரணம் என்று கூறுவது குப்பையான விமர்சனம்.”
“பொதுவாக டாஸில் வென்றவர்கள் போட்டியிலும் வெல்லலாம் என்ற கணிப்பு இருக்கும். மூன்றாவது டெஸ்ட் போட்டிகள் போன்று ஏதாவது ஒரு சில போட்டியில் இது மாறலாம். கடைசி டெஸ்ட் போட்டியில் எனது அணுகுமுறை முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும். முதல் டெஸ்ட் போட்டியில் எப்படி நிதானத்துடன் விளையாடி மெல்லமெல்ல எனது அதிரடியை வெளிப்படுத்தினேனோஸ் அதேபோல ஒரு அணுகுமுறையை கடைசி டெஸ்ட் போட்டியில் கடைபிடிப்பதற்கு முயற்சிப்பேன்.” என்றார்.