உலக கோப்பை தொடரில் தோல்விக்குப் பிறகு இந்திய அணியில் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கு தனித்தனி கேப்டன் களை நியமிக்க பிசிசிஐ நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
2014 ஆம் ஆண்டில் டெஸ்ட் போட்டியில் இருந்து தோனி ஓய்வு பெற்ற பிறகு, இளம் வீரர் விராட் கோலிக்கு கேப்டன் பொறுப்பு கொடுக்கப்பட்டது. அதன்பிறகு 2017 ஆம் ஆண்டிலிருந்து ஒருநாள் மற்றும் டி20 போட்டிக்கான கேப்டன் பொறுப்பையும் தோனி ராஜினாமா செய்தார். அப்போதில் இருந்து மூன்று வித போட்டிகளுக்கும் முழுநேர கேப்டனாக விராட் கோலி நியமிக்கப்பட்டிருந்தார்.
விராட் கோலி கேப்டனாக நியமிக்கப்பட்டதற்கு பிறகு 2017 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி இறுதிப் போட்டி வரை சென்று தோல்வியை தழுவியது. தற்போது 2019ஆம் ஆண்டு உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியது. குறிப்பாக, நாக் அவுட் போட்டிகளில் கோலி சரியாக ஆடுவதில்லை என்கின்ற குற்றச்சாட்டும் நிலவி வருகிறது.
இதனை கருத்தில் கொண்டு ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கு தற்போது துணை கேப்டனாக இருந்து வரும் ரோகித் சர்மா கேப்டன் பொறுப்பிற்கு உயர்த்தப்படலாம். அதேபோல் டெஸ்ட் போட்டிகளுக்கு விராட் கோலியே தொடர்ந்து கேப்டனாக இருந்து வருவார் என்கின்ற பேச்சுக்களும் உலக கோப்பை அரையிறுதி தோல்விக்குப் பிறகு பிசிசிஐ வட்டாரத்தில் நிலவி வருகிறது.
இதற்கிடையில் வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் மோதவிருக்கும் தொடரில் விராட் கோலி, பும்ராஹ், தோனி போன்ற முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, அத்தொடரில் ரோகித் சர்மா தலைமை பொறுப்பு வகிப்பார் என்பது உறுதியாகி உள்ளது. அதில் அதிகாரிகளின் நம்பகத் தன்மைக்கு ஏற்ப ரோஹித் சர்மா செயல் பட்டு விட்டால் தொடர்ந்து கேப்டன் பொறுப்பில் நீடிக்க வாய்ப்பு இருக்கிறது என பிசிசிஐ நிர்வாகி ஒருவர் நிகழ்ச்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.