இந்தியாவுக்கு கிரிக்கெட் விளையாட வருபவர்கள் இனி ஆப்கானிஸ்தான் அணியுடனும் விளையாட வேண்டும் – பிசிசிஐ

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் சர்வதேச கிரிக்கெட் அணிகள் கட்டாயமாக ஆப்கானிஸ்தான் அணியுடன் ஒரு பயிற்சிப் போட்டியில் விளையாட வேண்டும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

இந்தியாவுக்கு கிரிக்கெட் விளையாட வருபவர்கள் இனி ஆப்கானிஸ்தான் அணியுடனும் விளையாட வேண்டும்

ஆப்கானிஸ்தான் அணி கடந்த ஆண்டுதான் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடும் அந்தஸ்தை பெற்றது. டெஸ்ட் அணிக்கான அங்கீகாரத்தை பெற்று ஆப்கானிஸ்தான் அணி முதல் டெஸ்ட் போட்டியை இந்தியாவுக்கு எதிராக விளையாடுகிறது. இதுகுறித்து ஏற்கெனவே பிசிசிஐ அதிகாரப்பூர்வமான தகவலை வெளியிட்டு இருந்தது. இந்தப் போட்டி வரும்  ஜூன் மாதம் 14-ம் தேதி நடைபெற இருக்கிறது.இந்தப் போட்டிக்கான  இந்திய அணி ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளனர். கேப்டன் ரஹானே இந்தப் போட்டிக்கு கேப்டனாக செயல்பட இருக்கிறார்.

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சமீபத்தில் டெஸ்ட் அந்தஸ்து வழங்கியது. அந்த அணி, தனது முதல் டெஸ்டில் இந்திய அணியுடன் வரும் 14-ம் தேதி மோதுகிறது. அந்தப் போட்டி பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் நடக்கிறது.

இந்நிலையில், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் அழைப்பை ஏற்று அந்நாட்டுக்குச் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளர் (பொறுப்பு) அமிதாப் சவுத்ரி, அந்நாட்டு கிரிக்கெட் வாரியத் தலைவர் அடிஃப் மாஷல் உடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அமிதாப் சவுத்ரி கூறுகையில், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் அழைப்பை ஏற்று காபூல் வந்திருப்பது மிகப்பெரிய கவுரவம். அதேபோல், அந்த அணியின் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடுவது பி.சி.சி.ஐ.க்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த வாய்ப்பைத் தவறவிட பி.சி.சி.ஐ விரும்பவில்லை. அமைதியை வலியுறுத்தும் விதமாக இருநாடுகள் இடையேயான உறவை கிரிக்கெட் விளையாட்டு மேலும் வலுப்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு சர்வதேச அனுபவத்தை அளிக்கும் விதமாக இந்தியா வரும் கிரிக்கெட் அணிகள் ஆப்கானிஸ்தான் அணியுடன் ஒரு பயிற்சி ஆட்டத்தில் விளையாடும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.  இந்தியா-ஆப்கானிஸ்தான் இடையேயான இருதரப்பு கிரிக்கெட் உறவுகள் குறித்து கலந்தாலோசனைக்காக சென்றுள்ள பிசிசிஐ செயலர் அமிதாப் செளத்ரி பயிற்சி ஆட்டத்துக்கான் அறிவிப்பை வெளியிட்டார்.

ஐ.பி.எல் தொடரில் ஆப்கானிஸ்தான் வீரர்கள் கலந்துகொண்டுள்ளனர். இதனால், அவர்களுக்கு இந்தியாவில் ரசிகர்கள் இருக்கின்றனர். அதேபோல், ஆப்கானிஸ்தான் அணிக்கு சர்வதேச அளவில் வாய்ப்பு வழங்கும் பொருட்டு, இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் சர்வதேச கிரிக்கெட் அணிகள், ஆப்கானிஸ்தான் அணியுடன் பயிற்சிப் போட்டிகளில் விளையாட இருக்கின்றன, என அவர் தெரிவித்தார்.

கிரேட்டர் நொய்டா மற்றும் டேராடூன் பகுதியில் உள்ள மைதானங்களை ஆப்கானிஸ்தான் அணி சொந்த மைதானமாக பயன்படுத்திக்கொள்ள பி.சி.சி.ஐ அனுமதி அளித்ததற்கு ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நன்றி தெரிவித்து கொண்டது. டேராடூன் மைதானத்தில் வங்கதேசத்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆப்கானிஸ்தான் அணி விளையாட இருக்கிறது.

ஏற்கெனவே ஆப்கானிஸ்தான் – வங்கதேசம் அணிகள் விளையாடும் டி20 தொடருக்கான மைதான உதவியை  ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவுடன் மோதும் ஒரு டெஸ்ட் போட்டிக்கான ஆப்கானிஸ்தான் அணி வீரர்கள் வருமாறு:-

ஆஷ்கர் ஸ்டானிக்ஜாய் (கேப்டன்), முகமது ஷாஷ்ஜத், ஜாவித் அஹ்மத், ராக்மாத் ஷா, இஷானுல்லா, நசிர் ஜமால், ஹஷ்மதுல்லா ஷகிடி, அப்சர் ஜாஜாய், முகமது நபி, ரஷித் கான், ஜாஹிர்கான், அமிர் ஹம்சா, சையது ஷிர்ஜாத், யாமின் அஹ்மத்ஜாய், வாபாதர், முஜீப் ரகுமான்.

ஆப்கானிஸ்தானுடன் டெஸ்ட் போட்டியில் விளையாட இருக்கும் இந்திய அணி வீரர்கள் விவரம் வருமாறு:-

ரஹானே (கேப்டன்), ஷிகர் தவான், எம்.விஜய், லோகேஷ் ராகுல், புஜாரா, கருண்நாயர், விருத்திமான் சஹா (விக்கெட் கீப்பர்), ஆர்.அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், உமேஷ் யாதவ், முகமது ஷமி, ஹர்திக் பாண்ட்யா, இஷாந்த் ஷர்மா, ஷர்துல் தாகூர்.

Editor:

This website uses cookies.