மேற்கிந்தியத் தீவுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி T20 தொடரை முழுமையாகக் கைப்பற்றிய கையோடு, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரையும் வென்றது. அடுத்ததாக டெஸ்ட் தொடர் வரும் 22ம் தேதி தொடங்கவுள்ளது.
இந்நிலையில் டெஸ்ட் தொடருக்கு முன்னதாக மூன்று நாள் பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி விளையாடி வருகிறது. ஆண்டிகுவாவில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில், முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 297 குவித்திருந்தது. இந்திய வீரர் புஜாரா சதம் அடித்தார். மேலும், ரோகித் சர்மா அரைசதம் அடித்தார்.
இந்த ஆட்டத்தில் விராட் கோலிக்கு பதிலாக ரஹானே இந்திய அணியை வழி நடத்தினார். மேலும், விராட் கோலி பேட்டிங் செய்யவும் வரவில்லை. இதனால் கோலிக்கு என்னாயிற்று என ரசிகர்கள் கேள்வி எழுப்பினர். இந்நிலையில், மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் ஆட்டத்தின்போது விராட் கோலி விரலில் காயம் ஏற்பட்டது. அந்த காயம் காரணமாக அவர் இன்றைய போட்டியில் விளையாடவில்லை என கூறப்படுகிறது.
மேலும், பயிற்சி போட்டியில் விளையாடி காயம் பெரிதானால், டெஸ்ட் தொடரில் கோலி விளையாடுவது சிக்கலாகி விடும் என்பதால் முன்னெச்சரிக்கையாக அவர் இந்த பயிற்சி போட்டியில் விளையாடவில்லை என்றும் நேரடியாக டெஸ்ட் போட்டியில் கோலி பங்கேற்பார் என்று இந்திய அணி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி கடந்த 2008-ம் ஆண்டு ஆகஸ்ட் 18-ம் தேதி இலங்கைக்கு எதிராக தம்புலாவில் நடந்த ஒருநாள் போட்டியில் அறிமுகமானார். அவர் சர்வதேச கிரிக்கெட்டுக்குள் வந்து 11 ஆண்டுகள் நேற்றுடன் நிறைவு பெற்றது. இதை நினைவுகூரும் வகையில் கோலி இன்ஸ்டாகிராமில் புகைப்படம் பதிவிட்டுள்ளார்.
ஒருநாள் போட்டியில் அறிமுகமான விராட் கோலி, 18 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். தான் 18 ரன்களுடன் ஆட்டமிழந்து வெளியேறும் புகைப்படத்தைத்தான் கோலி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இந்த 11 ஆண்டுகளில் விராட் கோலி ஏராளமான கடினமான பாதைகளைக் கடந்து தற்போது கேப்டனாக உயர்ந்துள்ளார்.
கடந்த 10 ஆண்டுகளில் சர்வதேச அளவில் 20 ஆயிரம் ரன்களைக் குவித்த ஒரே வீரர் விராட் கோலி என்பது குறிப்பிடத்தக்கது. ஒருநாள் போட்டிகளில் சச்சினுக்கு அடுத்த இடத்தில் 43 சதங்களுடன் கோலி 2-வது இடத்தில் உள்ளார். சர்வதேச அளவில் 68 சதங்களை கோலி அடித்துள்ளார்.