3வது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வென்று இந்திய அணி கோப்பையை கைப்பற்றியது.
இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று மும்பையில் நடைபெற்றது. ஏற்கனவே 1-1 என்ற கணக்கில் தொடர் சமனில் இருந்ததால், இரு அணிகளும் இன்றைய போட்டியில் வென்று கோப்பையை கைப்பற்ற வேண்டும் என முனைப்பு காட்டின. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீசியது.
முதலில் பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ரோகித் ஷர்மா மற்றும் கே.எல்.ராகுல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி, வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை சிதறடித்தனர். ரோகித் ஷர்மா 71 (34) ரன்களில் அவுட் ஆகினார். பின்னர் வந்த ரிஷாப் பண்ட் ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினார். பின்னர் வந்த கேப்டன் கோலி தொடக்க ஆட்டக்காரர் ராகுலுடன் சேர்ந்து அதிரடியை தொடங்கினார். இருவரின் அதிரடியால் இந்திய அணி 200 ரன்களை கடந்தது. அபார பேட்டிங்கை வெளிப்படுத்திய கே.எல்.ராகுல் 91 (56) ரன்களில் விக்கெட்டை இழந்தார். இறுதிவரை அவுட் ஆகாமல் விளையாடிய கோலி 70 (29) ரன்களை குவித்தார். 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 240 ரன்கள் குவித்தது.
இதையடுத்து 241 என்ற இமாலய இலக்கை எதிர்த்து பேட்டிங்கை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் 17 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை கொடுத்து பரிதாப நிலையை அடைந்தது. பின்னர் ஜோடி சேர்ந்த சிம்ரான் ஹெட்மெயர் மற்றும் கேப்டன் பொலார்ட் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ரன்களை உயர்த்தினர். 41 (24) ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஹெட்மெயர் விக்கெட்டை இழந்தார்.
Photo by Vipin Pawar / Sportzpics for BCCI
தொடர்ந்து போராடிய பொலார்ட் 68 (39) ரன்களில் அவுட் ஆனார். 20 ஓவர்கள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 173 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.
இந்நிலையில் தனது இன்னிங்ஸ் பற்றி ஆட்டம் முடிந்த பிறகு விராட் கோலி கூறியதாவது:
நிறைய பேசியாகி விட்டது. களத்தில் இறங்கி திட்டங்களைச் செயல்படுத்துவதுதான் முக்கியம். என் பேட்டிங்கில் வித்தியாசமான அணுகுமுறையைக் கடைப்பிடிக்க வாய்ப்பு கிடைத்தது. நான் வழக்கமாக இப்படியாட மாட்டேன். கே.எல்.ராகுலிடம் கடைசி வரை நீ நில், நான் கொஞ்சம் சாத்திக் கொள்கிறேன் என்றும் கூறினேன். திருமணமாகி 2வது ஆண்டு நிறைவடைந்த தினம், எனவே எனக்கு இது சிறப்புத் தினம்.
அனைத்து வடிவங்களிலும் ரன்கள் குவிக்க முடியும் என்பது என் தன்னம்பிக்கை. எதுவாக இருந்தாலும் அதில் மனதைச் செலுத்தினால் போதும். என் ரோல் மிக முக்கியமானது, நான் 2 ரோல்களையும் செய்ய வேண்டும், அடித்தும் ஆட வேண்டும். களத்தில் இவ்வாறு ஆடி நம்பிக்கை பெற வேண்டியுள்ளது.
ராகுலும், ரோஹித்தும் தெளிவாக களத்தில் ஆடினர். முதலில் பேட் செய்தால் அடிப்பதா வேண்டாமா என்ற தயக்கம் இருந்து வந்தது, ஆனால் இன்று அது இல்லை.
இவ்வாறு கூறினார் விராட் கோலி.