நான் ஓய்வு பெறுவது எப்போது என்று இந்த நேரத்தில் சொன்னால் அணியில் உள்ள அனைவரும் அழுத்தத்திற்கு உள்ளாவார்கள். ஆகையால் நேரம் வரும்பொழுது நானே கூறுவேன் என்று சூசகமாக பதில் சொல்லியுள்ளார் மகேந்திர சிங் தோனி.
முதல் சீசனில் இருந்து தற்போது வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஒரே கேப்டனாக திகழ்ந்துவரும் தோனி, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 2019ஆம் ஆண்டிலிருந்து விளையாடவில்லை. 2020 ஆம் ஆண்டு ஓய்வு முடிவு அறிவித்தார். தொடர்ச்சியாக ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வருகிறார்.
அதன் பிறகு நடைபெற்று வரும் ஒவ்வொரு ஐபிஎல் சீசனும் தோனிக்கு இது தான் கடைசி சீசன் என்று பலராலும் பேசப்பட்டு வருகிறது. அப்போதெல்லாம் தனக்கே உரிய பாணியில் பத்திரிகையாளர்களுக்கு பதில் கொடுத்து வந்தார்.
முன்னாள் வீரர்களும் தற்போது இருக்கும் இந்திய வீரர்களும் தோனி ஓய்வு பெறமாட்டார் முழு உடல் தகுதியுடன் இருக்கிறார். கண்டிப்பாக அடுத்த 2-3 வருடங்களுக்கு தோனி விளையாடுவார் என்று தங்களது கணிப்புகளை தெரிவித்து வருகின்றனர்.
ஆனால் தோனி, இந்த விஷயத்தில் முழுமையாக அமைதி காத்து வருகிறார். கடந்த 2022ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடிய பிறகே நான் ஓய்வு பெறுவேன் என்று அப்போது தெரிவித்தார். அதன் அடிப்படையில் பலரும் இந்த வருடம் தோனி ஓய்வு பெற்றுவிடுவார் என்று கணிப்புகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்த சீசன் தோனிக்கு காலில் சிறு சிறு பிரச்சனைகள் வந்த வண்ணம் இருக்கின்றன. ஆகையால் இது தான் கடைசி சீசன். முற்றிலும் உண்மை என்று மீண்டும் பேசப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அடுத்ததாக பெங்களூர் அணிக்கு எதிரான லீக் போட்டியில் விளையாடுகிறது. இந்த போட்டிக்கு முன்பு நடந்த நிகழ்வில் பங்கேற்ற தோனி பத்திரிகையாளர்களிடமும் உரையாடினார். அதில் நீங்கள் எப்போது ஓய்வு பெறுவீர்கள்? அதற்கான முடிவை எப்போது அறிவிப்பீர்கள்? என்று கேள்விகள் எழுப்பப்பட்டது. அதற்கு தனக்கே உரிய பாணியில் சிரித்துக்கொண்டே பதில் கூறிய தோனி,
“அதற்கென்று நிறைய நேரங்கள் இருக்கிறது. இந்த சீசனில் இன்னும் நிறைய போட்டிகள் விளையாட வேண்டியது இருக்கிறது. இப்போது கூறினால் அணியின் உள்ள பயிற்சியாளர்கள் உட்பட வீரர்களும் அழுத்தத்திற்கு உள்ளாவார்கள். எங்களது கவனம் இப்போது போட்டியில் இருக்கிறது. உரிய நேரம் வரும்பொழுது அதற்கான அறிவிப்புகள் வெளிவரும்.” என்று கூறினார்.