இந்தியா பாகிஸ்தான் இடையேயான நேரடி கிரிக்கெட் தொடர்கள் நடத்துவதில் இருக்கும் சிக்கல்கள் என்ன என்பது குறித்து பிசிசிஐ., தலைவர் சவுரவ் கங்குலி ஓபனாக பேசியுள்ளார்.
இந்தியா பாகிஸ்தான் இடையேயான பல்வேறு அரசியல் பிரச்சனைகளால் கிரிக்கெட்டும் பாதிக்கப்பட்டுள்ளது. பரபரப்பிற்கு பஞ்சமே இல்லாமல் நடைபெறும் இந்தியா பாகிஸ்தான் இடையேயான கிரிக்கெட் தொடர்கள் கடந்த பல வருடங்களாக நடைபெறவே இல்லை. ஐசிசி.,யால் நடத்தப்படும் தொடர்களில் மட்டுமே இந்திய அணியும் பாகிஸ்தான் அணியும் மோதி வருகிறது.
இந்தியா பாகிஸ்தான் இடையேயான கிரிக்கெட் தொடர் வருடத்திற்கு ஒரு முறையாவது நடக்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. ஆனால் அதற்கான சாத்தியக்கூருகள் இருப்பதாக தெரியவில்லை.
சமீபத்தில் நடைபெற்ற டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா பாகிஸ்தான் இடையேயான கிரிக்கெட் போட்டியே அதிக பார்வையாளர்களால் பார்க்கப்பட்ட போட்டியாகும். இந்த போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்திருந்தாலும், ரசிகர்கள் மத்தியில் இந்த போட்டி மிகப்பெரும் வரவேற்பை பெற்றதால் இந்தியா பாகிஸ்தான் இடையேயான நேரடி தொடர்கள் மீண்டும் பழையபடி நடத்தப்பட வேண்டும் என முன்னாள் வீரர்கள், கிரிக்கெட் வல்லுநர்கள் சிலர் கருத்துகள் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் அதை உண்மைப்படுத்தும் வகையில் பிசிசிஐயின் சேர்மன் சௌரவ் கங்குலி பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான போட்டி குறித்து முக்கிய தகவலை தெரிவித்துள்ளார்.
அதில், பிசிசிஐ தலைவரான நானும் பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாக தலைவரான ரமீஷ் ராஜா ஆகிய இருவரும் முடிவெடுப்பதால் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்று விடாது, அப்படி நடைபெற வேண்டுமென்றால் இரு நாடுகளும் ஒருமனதோடு சம்மதிக்க வேண்டும், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான போட்டி இருநாடுகளின் அரசியலுக்கு உட்பட்டதாகும் என்று கங்குலி அதில் தெரிவித்திருந்தார்.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அண்டை நாடுகளாக இருந்தாலும் இரு நாட்டின் அரசியல் சூழ்நிலை தற்போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான போட்டி நடைபெறுவதற்கான வாய்ப்பை அமைத்து தராது என்றும் கங்குலி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.