குஜராத் அணி மிகச்சிறப்பாக செயல்பட்டு வெற்றிபெற மிகமுக்கிய காரணமாக இருந்தவர் இவர் தான் என்று பெருமிதமாக பேசியுள்ளார் ஹர்திக் பாண்டியா.
அகமதாபாத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. போட்டியில் குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் குவித்தது.
துவக்கத்தில் சுப்மன் கில் 56 ரன்கள் அடித்து அசத்தினார். மிடில் ஆர்டரில் மில்லர்(46) மற்றும் அபினவ் மனோகர்(42) இருவரும் சேர்ந்து 71 ரன்கள் சேர்த்ததால், அணியின் ஸ்கோர் 200 கடக்க மிக முக்கிய பங்காற்றினர்.
முதல் இன்னிங்ஸ் முடிவிலேயே மும்பை அணி கலக்கம் கண்டது. இருப்பினும் இந்த ஸ்கோரை சேஸ் செய்த மும்பை அணிக்கு எவருமே பார்ட்னர்ஷிப் அமைக்காதது பெரிய ஏமாற்றமாக அமைந்தது.
கேமரூன் கிரீன் 33 ரன்கள், நேஹல் வதேரா 40 ரன்கள் அடித்தனர். இவர்களை தவிர யாரும் பெரிதளவில் ஸ்கோர் அடிக்காததால் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 152 ரன்கள் மட்டுமே அடித்து, 55 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது.
மும்பையை வீழ்த்தி அபார வெற்றி பெற்ற ஹர்திக் பாண்டியாவின் அணி புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியது. போட்டி முடிந்த பிறகு பேட்டியளித்த அவர் கூறுகையில்,
“வெளியிலேயே முடிவுகள் எடுத்து விட்டு உள்ளே வருவதை விட, போட்டியின் நடுவே சூழலுக்கு ஏற்றவாறு சில முடிவுகள் எடுத்து அதற்கேற்றவாறு செயல்படுவது தான் எனது எண்ணமாகவே இருந்திருக்கிறது. மேலும் கேப்டன் பொறுப்பில் நான் எப்போதும் எனது உள்ளுணர்வு என்ன சொல்கிறதோ அதற்கேற்றவாறு செயல்படுவேன்.
அப்படித்தான் 2 சுழல் பந்துவீச்சாளர்களுக்கும் தொடர்ச்சியாக நான்கு ஓவர்கள் கொடுத்து ஆட்டத்தை விரைவாக முடிக்க நினைத்தோம். ஏனெனில் மும்பை பேட்ஸ்மேன்கள் பந்துவீச்சில் வேகம் இருந்தால் எளிதாக ரன் குவிக்கக்கூடியவர்கள். அதன் அடிப்படையிலேயே செயல்பட்டோம்.
அபினவ் மனோகர் எங்களது அணியின் மிகச் சிறந்த ஹிட்டர். டெத் ஓவர்களில் சிறந்த ஹிட்டராக அணியில் அவர்தான் இருக்கிறார். கடந்த வருடம் அவர் அணியில் இருந்தபோது, சில விஷயங்களை சரி செய்துகொள்ள வேண்டும் என்று கூறினோம் இந்த வருடம் இன்னும் அபாயகரமாக வந்திருக்கிறார். வலைப்பயிற்சியில் இரண்டு மணி நேரங்கள் தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டதன் பலனாகவே இப்படி செயல்பட்டு வருகிறார். இவ்வளவு பெரிய ஸ்கோர் எட்டுவதற்கு உதவி செய்திருக்கிறார். மிகப்பெரிய திருப்புமுனையாகவும் அமைந்திருக்கிறார்.” என்றார்.