இன்றைய போட்டியில் பஞ்சாப் வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணம் அவர் ஒருவர் தான். ஆட்டநாயகன் விருது நியாயமாக அவருக்கு கொடுத்திருக்க வேண்டும் என்று போட்டி முடிந்த பிறகு பேட்டி அளித்துள்ளார் ஷாம் கர்ரன்.
பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிய லீக் போட்டி பரபரப்பிற்கு சற்றும் குறைவில்லாமல் முடிந்துவிட்டது. முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 214 ரன்கள் குவித்தது.
ஒரு கட்டத்தில், 15 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 118 ரன்கள் மட்டுமே பஞ்சாப் அணி அடித்திருந்தது. 16ஆவது ஓவரில் 31 ரன்கள், 18ஆவது ஓவரில் 25 ரன்கள் என அடுத்தடுத்து பேட்டிங்கில் வெளுத்து வாங்கியதால் 214 ரன்கள் வரை எட்டியது பஞ்சாப் அணி. ஷாம் கர்ரன் 55 ரன்கள் ஹர்பிரித் சிங் 41 ரன்கள் அடித்து முக்கிய பங்காற்றினர்.
இதனையடுத்து இலக்கை சேஸ் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 201 ரன்கள் மட்டுமே அடித்து 13 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. சிறப்பாக பேட்டிங் செய்த கேமரூன் கிரீன் 67 ரன்கள், சூர்யகுமார் யாதவ் 57 ரன்கள் மற்றும் கேப்டன் ரோகித் சர்மா 44 ரன்கள் அடித்திருந்தனர்.
மும்பை அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவை என்று இருந்தது. அர்ஷ்தீப் சிங் அபாரமாக பந்துவீசி இரண்டு ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை 20ஆவது ஓவரில் கைப்பற்றி வெற்றியை உறுதி செய்தார்.
ஆட்டநாயகன் விருது ஷாம் கர்ரன்-க்கு கொடுக்கப்பட்டது. தற்காலிக கேப்டனாக செயல்பட்ட அவர் போட்டி முடிந்தபின் பேட்டி அளிக்கையில், “இது எங்களுக்கு சிறப்பான வெற்றி. இந்த மைதானத்தில் நிலவி வரும் சூழல் அபாரமாக இருக்கிறது. மறக்க முடியாத ஒன்றாகவும் அமைந்துவிட்டது.
ஆட்டநாயகன் விருதை பொறுத்தவரை எனக்கு கிடைப்பது நியாயமாக இருக்கிறது. வெற்றி பெற்று கொடுத்த அவருக்கு தான் சென்றிருக்க வேண்டும். மேலும் பாய்ஸ் ஒன்றிணைந்து செயல்பட்டதால் கிடைத்த வெற்றி இது ஷிகர் தவான் இல்லாதபோது பொறுப்பேற்றுக்கொண்டு விளையாட வேண்டும் என்று எண்ணினோம்.
அவர் இல்லாத மூன்று போட்டிகளில் இரண்டு வெற்றிகளை பெற்றுள்ளோம் மொத்தமாக 7 போட்டிகளில் நான்கு வெற்றி என்பது எந்தவித தவறும் சொல்ல முடியாத அளவிற்கு இருக்கிறது. இன்றைய போட்டியில் ஒரு சில தவறுகளை செய்திருக்கிறோம். இன்னும் இந்த தொடரில் நிறைய போட்டிகள் இருக்கின்றன. நிறைய தூரமும் செல்ல வேண்டியது இருக்கிறது. ஒவ்வொரு வெற்றியையும் என்ஜாய் செய்ய வேண்டும். அழுத்தம் எடுத்துக் கொள்ளாமல் தொடர்ந்து செயல்படுவது தான் முக்கியம்.” என்றும் பேசினார்.