மதத்தை அடிப்படையாக வைத்து என்னை விமர்சித்தவர்கள் இந்தியர்களே கிடையாது என்று முகமது சமி தன்னை விமர்சித்தவர்களை கடுமையாக சாடியுள்ளார்.
2021 உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் போட்டியில் இந்திய அணி மிகவும் மோசமாக விளையாடி 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது, இந்த தோல்விக்கு முக்கிய காரணம் இந்திய இந்திய அணியில் விளையாடிய அனைத்து வீரர்களுமே என்று கூறலாம், அந்த அளவிற்கு ஒருவர்கூட பேர் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு விளையாடவில்லை.
ஆனால் கிரிக்கெட்டில் ஏபிசிடி கூட தெரியாத, சில கெட்தெண்ணம் பிடித்த நபர்கள் இந்திய அணியின் இந்த தோல்விக்கு வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி தான் காரணம் என்று மதத்தை அடிப்படையாக வைத்து விமர்சனம் செய்தனர்.
இப்படி மதத்தை வைத்து விமர்சனம் செய்வது முட்டாள்தனமான விஷயம் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் மற்றும் சக வீரர்கள் பலரும் முகமது சமிக்கு ஆதரவாக தனது கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில் நீண்ட நாட்களுக்குப் பிறகு உலக கோப்பை தொடரில் நடைபெற்ற அந்த சம்பவம் குறித்து இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி மனம் திறந்து பேசியுள்ளார்.
அதில் பேசிய அவர், மதவெறிக்கு மருந்து என்பது கிடையாது, இன்னும் சொல்லப்போனால் இப்படி விமர்சிப்பவர்கள் உண்மையான ரசிகர்களே கிடையாது, இன்னும் ஒரு படி மேலே அவர்கள் இந்தியர்களே கிடையாது என்று முகமது சமி ஆக்ரோஷமாக பேசினார், ஒருவர் இப்படி அடுத்தவரை மிகவும் மோசமாக விமர்சித்தால் அவருக்கு படிப்பறிவு குறைவு என்பதை புரிந்து கொள்ள வேண்டியதுதான். ஒருவரை எனக்கு மிகவும் பிடிக்கும் என்றால் அவரைப் பற்றி நான் அதிகமாக மற்றவரிடம் பேச மாட்டேன், சில உண்மையான ரசிகர்கள் அந்த போட்டியில் மிகவும் மோசமாக விளையாடியதை நினைத்து கவலைப்பட்டிருந்தார்கள், நானும் அதை நினைத்து கவலை பட்டேன், நாம் அனைவரும் மனிதர்களே என்னேரமும் 100% சிறப்பாக செயல்பட முடியாது. இந்த விமர்சனத்தை பற்றியெல்லாம் நான் கவலைப்படவில்லை, இது எல்லாம் என்னுடைய திறமையை பாதிக்காது என்று முகமது சமி பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.