மேட்ச்சை ஃபுல் கன்ட்ரோல்ல வச்சிருந்தோம்.. இதுதான் எங்களோட தோல்விக்கு காரணம் – ரோகித் சர்மா பேட்டி!

15 ஓவர்கள் வரை ஆட்டம் எங்களது கன்ட்ரோலில் இருந்தது. கடைசியில் ரன்களை வாரிக் கொடுத்துவிட்டோம். எங்களது தோல்விக்கு இதுதான் காரணம் என்று பேசியுள்ளார் ரோகித் சர்மா.

மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதிய லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஆறு விக்கெட்டுகள் இழப்பிற்கு 207 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக சுப்மன் கில் 56 ரன்கள், டேவிட் மில்லர் 46 ரன்கள், அபினவ் மனோகர் 42 ரன்கள் அடித்திருந்தனர்.

208 ரன்கள் எனும் இமாலய இலக்கை துரத்திய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை. கேமரூன் கிரீன் 33 ரன்கள், நேஹால் வதேரா 40 ரன்கள் அடித்திருந்தனர். மற்ற வீரர்கள் சொற்பரன்களுக்கு ஆட்டமிழக்க, 20 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் மட்டுமே அடித்தது. 55 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது.

போட்டி முடிந்து பிறகு தோல்வியடைந்த அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேசுகையில், “இந்த முடிவு சற்று ஏமாற்றம் அளிக்கிறது. போட்டி எங்களது கன்ட்ரோலில் இருந்தது. கடைசி சில ஓவர்களில் நிறைய ரன்களை வாரிக்கொடுத்தது மிகப்பெரிய தவறில் முடிந்துவிட்டது.

ஒவ்வொரு அணிக்கும் ஒவ்வொரு பலம் இருக்கும். எங்களது அணிக்கு பேட்டிங் பலமாக இருக்கிறது. எப்போதும் மைதானத்திற்குள் சென்று எங்களது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இலக்கை அடைவதற்கு முற்படுவோம். ஆனால் இன்றைய நாள் அதுபோல எங்களுக்கு அமையவில்லை.

இன்று மைதானத்தில் சிறிதளவு ஈரப்பதம் காணப்பட்டது. இப்படி இருக்கையில், யாரேனும் ஓரிரு பேட்ஸ்மேன்கள் போட்டியை கடைசிவரை எடுத்துச் சென்றிருக்க வேண்டும்.

கடந்த போட்டியில் 215 ரன்கள் சேஸ் செய்த போது, 200 பிளஸ் ரன்களை அடித்து விட்டோம். இன்று அப்படி நடக்கவில்லை. ஏனெனில் 15 ஓவர்களுக்குள் எங்களது முக்கியமான பேட்ஸ்மேன்களை இழந்துவிட்டோம். குறிப்பாக கடைசி ஏழு ஓவர்களில் மிகப்பெரிய ஹிட் அடிக்கக்கூடிய பேட்ஸ்மேன்கள் களத்தில் இல்லை. இந்த இடத்தில் தான் தவறு நேர்ந்து விட்டது. தோல்விக்கான காரணமாகவும் பார்க்கிறேன்.” என்றார்.

Mohamed:

This website uses cookies.