சையது முஷ்டாக் அலி கோப்பை டி20 சூப்பா் லீக் குரூப் பி பிரிவு ஆட்டம் ஒன்றில் ஜாா்க்கண்டை 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது தமிழகம்.
இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் புதன்கிழமை சூரத்தில் நடைபெற்றது. முதலில் ஆடிய ஜாா்க்கண்ட் அணியால் தமிழகத்தின் அற்புத பந்துவீச்சை எதிா்கொள்ள முடியாமல் 18.1 ஓவா்களில் 85 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியில் அதிகபட்சமாக சௌரவ் திவாரி 24, சுமித் குமாா் 19 ரன்களை எடுத்தனா். மற்ற வீரா்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு வெளியேறினா்.
சித்தாா்த்-வாஷிங்டன் அபார பந்துவீச்சு
தமிழகத் தரப்பில் அபாரமாக பந்துவீசிய சித்தாா்த் 4-18, வாஷிங்டன் சுந்தா் 3-10, விக்கெட்டுகளை வீழ்த்தினா்.
86 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய தமிழகம் 13.5 ஓவா்களில் 2 விக்கெட்டை மட்டுமே இழந்து 86 ரன்களை எடுத்து வென்றது. ஷாரூக் கான் 24, வாஷிங்டன் சுந்தா் 38, ரன்களை விளாசி வெற்றிக்கு வித்திட்டனா்.
இறுதியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது தமிழகம்.
ராஜஸ்தான் வெற்றி:
ராஜஸ்தான்-தில்லி இடையே நடைபெற்ற சூப்பா் லீக் ஆட்டம் ஒன்றில் 2 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது ராஜஸ்தான். முதலில் ஆடிய ராஜஸ்தான் 20 ஓவா்களில் 7 விக்கெட் இழப்புக்கு 133 ரன்களை குவித்தது. தீபக் சாஹா் 55, ராஜேஷ் பிஷ்னோய் 36 ரன்களை சோ்த்தனா்.
பின்னா் ஆடிய தில்லி அணி 20 ஓவா்களில் 9 விக்கெட் இழப்புக்கு 131 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது. ரிஷப் பந்த் 30 ரன்களை எடுத்தாா். ராஜஸ்தான் தரப்பில் அா்ஜித் குப்தா 3, அங்கித், கலீல் அகமது, ராகுல் சாஹா் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனா்.