தமிழகத்தில் வருங்கால இளம் வீரர்களை உருவாக்குவதற்கு கிடைத்த ஐபிஎல் தான் இந்த டிஎன்பிஎல் என விஜய் சங்கர் சென்னையில் நடந்த கூட்டத்தில் பேட்டியளித்தார்.
உலகக்கோப்பை தொடர் முடிவு பெற்றவுடன் “சங்கர் சிமெண்ட் டிஎன்பிஎல் 2019 தொடர்” வருகின்ற 19-ஆம் தேதி திண்டுக்கல்லில் உள்ள என்பிஆர் கல்லூரி மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் சேப்பாக் சூப்பர் கில்லிஸ், திண்டுக்கல் டிராகன்ஸ் இரு அணிகளும் மோதுகின்றன.
ஜூலை 19-இல் துவங்கி ஆகஸ்ட் 15 வரை சென்னை, திருநெல்வேலி, திண்டுக்கல் மூன்று இடங்களில் உள்ள மைதானங்களில் மொத்தம் 32 போட்டிகள் நடக்கின்றன. அனைத்து போட்டிகளும் இரவு 7.15 மணிக்கும் தொடங்கும். இரண்டு போட்டிகள் உள்ள நாளில் முதல் போட்டி 3.15 மணிக்கு துவங்கும். இரண்டாவது போட்டி 7.15 மணிக்கு துவங்கும். இந்த ஆண்டு டிஎன்பிஎல் தொடர் போட்டிகளில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 81 வீரர்கள் களம் ஆடுகின்றனர்.
டிஎன்பிஎல் 2019 போட்டி குறித்த அறிமுகக் கூட்டம் சென்னையில் நேற்று (ஜூலை 14) நடைபெற்றது. இதில்
தமிழ்நாடு கிரிக்கெட் சங்க இணைச் செயலாளர் ஆர்.ஐ.பழனி தலைமை பொறுப்பேற்று நடத்தினார். தமிழகத்தின் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பத்ரிநாத், ஹேமங் பதானி, திண்டுக்கல் அணி பயிற்சியாளர் வெங்கட்ரமணா, காரைக்குடி வீரர் யோமகேஷ், லைக்கா பயிற்சியாளர் ஆர்.பிரசன்னா உள்ளிட்ட பலர் பங்குபெற்றனர்.
கூட்டத்தில் இந்திய அணியின் ஆல்ரவுண்டர் விஜய் சங்கர் பேசுகையில், “முன்பைவிட இம்முறை டிஎன்பிஎல் தொடருக்கு புதிய வீரர்கள் ஏராளமானோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அனைத்து மாவட்ட வீரர்களுக்கும் டிஎன்பிஎல் பெரிதும் சென்றடைந்துள்ளது. நடராஜன், வருண் சக்கரவர்த்தி ஆகியோர் ஐபிஎல் ஏலத்தில் அதிக விலைக்கு வாங்கப்பட்டனர்.
தமிழகத்தின் ஐபிஎல் தான் டிஎன்பிஎல் போட்டிகள். இதை குறிப்பாக இளம் வீரர்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தமிழகத்தில் இளம் வீரர்களை உருவாக்குவதற்கும் டிஎன்பிஎல் முக்கிய பங்களிக்கிறது. இதன் மூலம் தமிழக அணிக்கும் தரமான வீரர்கள் எதிர்காலத்தில் தடையின்றி கிடைப்பர் என்றார்.