சென்னை வேண்டாம்… இந்த டீமுக்கு போயிடுங்க கோலி; விராட் கோலியிடம் வேண்டுகோள் வைக்கும் கெவின் பீட்டர்சன்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி நடப்பு ஐபிஎல் தொடரின் ப்ளே ஆஃப் வாய்ப்பை இழந்து வெளியேறியுள்ள நிலையில் விராட் கோலி, பெங்களூர் அணியில் இருந்து விலக வேண்டும் என முன்னாள் கிரிக்கெட் வீரரான கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து உள்ளூர் டி.20 தொடரான ஐபிஎல் தொடர் மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது.
இதுவரை மொத்தம் 15 சீசன்கள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்த வருடத்திற்கான தொடர், கடந்த மார்ச் மாதம் 31ம் தேதி துவங்கியது.
மொத்தம் 70 போட்டிகள் கொண்ட இந்த தொடரின் லீக் போட்டிகள் முடிவில் குஜராத், சென்னை, லக்னோ மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றன. மற்ற அணிகள் ப்ளே ஆஃப் வாய்ப்பை இழந்து வெளியேறின. இதில் குறிப்பாக கடந்த தொடர்களை விட, நடப்பு தொடரில் பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் சிறப்பாக செயல்பட்ட பெங்களூர் அணி, இந்த முறையும் ப்ளே ஆஃப் வாய்ப்பை இழந்து வெளியேறியது.
விராட் கோலி இரண்டு சதங்கள் அடித்து கொடுத்த போதிலும், பெங்களூர் அணி ப்ளே ஆஃப் வாய்ப்பை இழந்து வெளியேறியுள்ளது அந்த அணியின் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. விராட் கோலி பெங்களூர் அணியில் இருந்து விலகிவிட வேண்டும் என பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இந்தநிலையில், முன்னாள் கிரிக்கெட் வீரரான கெவின் பீட்டர்சனும், விராட் கோலி பெங்களூர் அணியில் இருந்து விலகும் நேரம் வந்துவிட்டது என தெரிவித்துள்ளார்.
இது குறித்து கெவின் பீட்டர்சன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ட்வீட்டில், “விராட் கோலி வேறு அணிக்கு மாற வேண்டிய நேரம் வந்துவிட்டது. அவர் பெங்களூர் அணியில் இருந்து விலகி தலைநகரத்திற்கு செல்ல வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.
விராட் கோலி டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக விளையாட வேண்டும் என்பதை கெவின் பீட்டர்சன் சூசகமாக தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.