தோனியின் கடைசி தொடர் எப்போது ? : வெளிவந்த அரசல் புரசல் செய்தி!

(Photo source: Getty Images)

இந்தியாவில் இப்போது டோனியின் ஓய்வு பற்றிதான் முக்கிய பேச்சு நிலவி வருகிறது. அவரது ஓய்வு குறித்த விவாதம் சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது. அவர் ஓய்வு பெற்று விடுவது நல்லது என்று ஒரு தரப்பும், இன்னும் சில ஆண்டுகள் விளையாடலாம் என்று ஒரு தரப்பும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதில் முன்னாள் வீரர்கள் சிலரும் கூட டோனிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர்.
உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் மிடில் ஆர்டர் பிரச்சினை எதிர்ப்பார்த்தது போல் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. எந்தவொரு வீரரும் பெரிதாக சோபிக்கவில்லை. இந்த உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியைப் பொறுத்தவரை ரோகித் சர்மா 648 ரன்களுடன் முதலிடத்திலும், விராட் கோலி 443 ரன்களுடன் இரண்டாம் இடத்திலும் உள்ளனர். 9 போட்டிகளில் விளையாடிய கே.எல்.ராகுல் 361 ரன்கள் எடுத்துள்ளார்.
ரோகித், கோலி, ராகுல் ஆகிய மூன்று பேருக்கு அடுத்தபடியாக இந்திய அணியில் அதிக ரன்கள் அடித்தவர் டோனிதான். 8 இன்னிங்சில் விளையாடி 273 ரன்கள் எடுத்துள்ளார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஹர்திக் பாண்ட்யா கூட 9 போட்டிகளில் விளையாடி 226 ரன்கள் மட்டுமே எடுத்தார். ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. ஆனால், டோனி இரண்டு அரைசதம் அடித்துள்ளார்.
பேட்டிங் சராசரியைப் பொறுத்தவரை கூட ரோகித் (81), விராட் கோலி (55.38) ஆகிய இருவருக்கு அடுத்தப்படியாக டோனி 45.50 ரன் சராசரியுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார். கே.எல்.ராகுல் கூட 45.12 ரன் சராசரிதான் வைத்துள்ளார். ஹர்திக் பாண்ட்யா(32.29), ரிஷப் பண்ட் (29) ரன்ரேட் மட்டுமே வைத்துள்ளனர். மிடில் ஆர்டரில் விளையாடிய விஜய்சங்கர், கேதர் ஜாதவ், தினேஷ் கார்த்திக் என யாருமே பெரிதாக சோபிக்கவில்லை.
புள்ளி விவரங்கள் இப்படியிருக்க, டோனியின் ஓய்வு குறித்த பேச்சுக்கள் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. டோனி ஓய்வு அறிவிப்பை வெளியிடாவிட்டாலும், அடுத்து வரும் தொடர்களில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட மாட்டாது  என பிசிசிஐ நிர்வாகி ஒருவர் வெளிப்படையாகவே கூறியுள்ளார். இது, டோனி ஓய்வு அறிவிப்பு வெளியிட நேரடியாக கொடுக்கப்படும் அழுத்தமாகவே பார்க்கப்படுகிறது.
இது ஒருபுறம் இருக்க, நவம்பர் மாதம் பங்களாதேஷில்  நடைபெறவுள்ள முத்தரப்பு தொடர்தான் டோனிக்கு கடைசியாக இருக்கும் என்று பிசிசிஐ தரப்பில் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அந்தத் தொடரில் தென்னாப்ரிக்காவும் விளையாடுகிறது. டோனியின் மீது விமர்சனங்கள் இல்லாமல் இல்லை. அவரது பேட்டிங் முன்பு போல் இல்லை என்பதை எல்லோரும் ஒத்துக் கொள்கிறார்கள். ஆனால், இந்திய அணிக்கே டோனி பயன்படமாட்டார் என்ற முடிவு சரியானதாக இருக்குமா எனத் தெரியவில்லை.
மூன்று ஐசிசி கோப்பைகளை இந்திய அணிக்கு பெற்றுத் தந்த கேப்டனாகவும், சிறந்த விக்கெட் கீப்பர், சிறந்த பினிஷராக வலம் வந்த டோனியை நல்ல முறையில் வழியனுப்பி வைப்பது பிசிசிஐ-யின் கடமையாகும்.

Sathish Kumar:

This website uses cookies.