டெல்லி கேபிடல்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 163 ரன்கள் எடுத்துள்ளது.
ஐபிஎல்-இன் இன்றைய (சனிக்கிழமை) 2-ஆவது போட்டியில் டெல்லி கேபிடல்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற டெல்லி கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக வழக்கம் போல் கேஎல் ராகுல், கிறிஸ் கெயில் களமிறங்கினர். லாமிசானே வீசிய 2-ஆவது ஓவரில் ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி அடித்த ராகுல், அதே ஓவரில் ஆட்டமிழந்தார். எனினும், கிறிஸ் கெயில் தனது வழக்கமான பாணியில் அதிரடியாக ரன் குவித்தார்.
ஆனால், பஞ்சாப் பேட்ஸ்மேன்கள் கெயிலின் அதிரடியை பயன்படுத்தாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அகர்வால் 2 ரன்கள், மில்லர் 7 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.
இதையடுத்து, கெயில் லாமிசானே ஓவரில் ஒரு சிக்ஸர் அடித்து அடுத்த பந்திலேயே ஆட்டமும் இழந்தார். அவர் 37 பந்துகளில் 6 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள் உட்பட 69 ரன்கள் எடுத்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய சாம் கரன் ரன் ஏதும் எடுக்காமல் அதே ஓவரில் ஆட்டமிழந்தார்.
அதன்பிறகு, மன்தீப் சிங் மற்றும் அஸ்வின் ஓரளவு துரிதமாக ரன் குவித்தனர். இதனிடையே, அக்ஸர் படேல் பந்தில் மன்தீப் சிங் 30 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதையடுத்து, கேப்டன் அஸ்வின் கடைசி ஓவரில் 16 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதையடுத்து, இளம் வீரரான ஹர்ப்ரீத் ப்ரார் கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து ஆறுதல் அளித்தார்.
இதன்மூலம், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 163 ரன்கள் எடுத்தது. இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஹர்ப்ரீத் ப்ரார் 12 பந்துகளில் 20 ரன்கள் எடுத்தார்.
டெல்லி கேபிடல்ஸ் சார்பில் சந்தீப் லாமிசானே 3 விக்கெட்டுகளையும், ககிசோ ரபாடா மற்றும் அக்ஸர் படேல் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.