விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் 1-1 என முடிந்தது. தற்போது 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா 31 ரன் வித்தியாசத்திலும் பெர்த்தில் நடந்த 2-வது டெஸ்டில் ஆஸ்திரேலியா 146 ரன் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.
இரு அணிகளும் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி இன்று காலை 5 மணிக்கு மெல்போர்ன் நகரில் தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. துவக்க வீரர்களாக மயாங்க் அகர்வால், விஹாரி ஆகியோர் களம் இறங்கினர்.
3-வது டெஸ்டில் விளையாடும் அணி விவரம் வருமாறு:-
இந்தியா: விராட் கோலி (கேப்டன்), மயாங்க் அகர்வால், விஹாரி, புஜாரா, ரகானே, ரோகித் சர்மா, ரிஷப் பந்த், பும்ரா, இஷாந்த் சர்மா, ஜடேஜா, முகமது சமி
ஆஸ்திரேலியா: டிம் பெய்ன் (கேப்டன்), ஆரோன் பிஞ்ச், மார்கஸ் ஹாரிஸ், உஸ்மான் கவாஜா, ஷான் மார்ஷ், டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ், பேட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், நாதன் லயன், ஹசில்வுட்
அடிலெய்டு மற்றும் பெர்த்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் தொடக்க பேட்ஸ்மேன்களாக களம் இறங்கிய முரளி விஜய் மற்றும் லோகேஷ் ராகுல் சொதப்பினார்கள். இதனால் மெல்போர்ன் டெஸ்டில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டனர். மயாங்க் அகர்வால் ஆடும் லெவன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
புகழ்மிக்க மெல்போர்ன் மைதானத்தில் மயாங்க் அகர்வால் அறிமுகம் ஆக இருக்கிறார். கடந்த ரஞ்சி டிராபி சீசனில் முச்சதம் மற்றும் மூன்று சதங்களுடன் 1003 ரன்கள் குவித்தார். சராசரி 76.46 ஆகும். இதனால் இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்துள்ளது.
மெல்போர்ன் மைதானத்தில் இந்திய அணியின் முன்னாள் அதிரடி தொடக்க பேட்ஸ்மேன் ஆன சேவாக் புயல் வேகத்தில் 195 ரன்கள் குவித்தார். சேவாக் எப்படி ஆக்ரோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினாரோ, அதே ஆட்டத்தை மயாங்க் அகர்வாலிடம் எதிர்பார்க்கிறேன் என்று அவரது பயிற்சியாளர் இர்பான் சைத் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மயாங்க் அகர்வால் குறித்து இர்பான் கூறுகையில் ‘‘மெல்போர்ன் டெஸ்டில் சேவாக்கை போன்று ஆக்ரோசமான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்ற நான் எதிர்பார்க்கிறேன். மயாங்க் அகர்வாலை நான் யாருடனும் ஒப்பிடவில்லை. சேவாக் சில நேரம் அவரது அணுகுமுறையில் இருந்து பின்வாங்கி சாதாரணமாக காணப்படுவார். ஆனால் மயாங்க் அகர்வால் அப்படியில்லை. தீவிர நோக்கம் கொண்டவர். அதேபோல் மிகவும் சீரியஸான வீரர்.
அவருடைய ஆட்டமுறை பந்தை ஸ்ட்ரோக் வைத்து தள்ளிவிடுவது போல் இருக்காது. மிகவும் நேர்மறையான வீரர். அவரது சிறப்பான ஆட்டம் தொடரும் என்றும், பேட்டிங் செய்யும்போது ஆக்ரோசம் என்ற யுக்தியை பயன்படுத்துவார் என்றும் நம்புகிறேன்’’ என்றார்.