மீண்டும் ஒரு சதம் அடித்து சாதனை படைத்த ரோஹித் சர்மா; கொண்டாடும் ரசிகர்கள்
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் சதம் அடித்த ரோகித் சர்மா, இரண்டாவது இன்னிங்ஸிலும் சதம் அடித்து அசத்தியுள்ளார்.
தென்னாப்பிரிக்க அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 502 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. மயங்க் அகர்வால், 215 ரன்களும் ரோகித் சர்மா 176 ரன்களும் எடுத்திருந்தனர். பின்னர் முதல் இன்னிங்ஸை தொடங்கிய தென்னாப்பிரிக்க அணி, 431 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. டீன் எல்கர் 160 ரன்களும் குயின்டன் டி காக் 111 ரன்களும் எடுத்தனர். இந்திய தரப்பில் அஸ்வின் 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
Photo by Deepak Malik / SPORTZPICS for BCCI
பின்னர் இரண்டாவது இன்னிங்ஸை இந்திய அணி தொடங்கியது. மயங்க் அகர்வால் 7 ரன்னில் கேசவ் மகராஜ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பின்னர் ரோகித் சர்மாவுடன் புஜாரா இணைந்தார். இருவரும் சிறப்பாக ஆடி வந்தனர். 81 ரன்கள் எடுத்திருந்தபோது பிலாண்டர் பந்துவீச்சில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். அடுத்து ஜடேஜா, ரோகித் சர்மாவுடன் இணைந்தார். சிறப்பாக ஆடிய ரோகித் சர்மா மீண்டும் சதம் அடித்தார். அவர் 126 ரன்களுடனும் ஜடேஜா 10 ரன்களுடனும் தொடர்ந்து ஆடி வருகின்றனர். இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 234 ரன்கள் எடுத்துள்ளது.