விராட் கோலி ஸ்பின்னர்களுக்கு எதிராக இந்த இரண்டு விஷயங்களை செய்யமாட்டார். ஆகையால் விக்கெட் இழக்க வாய்ப்பு உள்ளது என்று எச்சரித்துள்ளார் சஞ்சய் பாங்கர்.
இந்தியாவிற்கு வந்துள்ள ஆஸ்திரேலியா அணி நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வருகிற பிப்ரவரி ஒன்பதாம் தேதி நாக்பூர் மைதானத்தில் நடைபெறுகிறது.
கடந்த இரண்டரை மூன்று வருடங்களாக சர்வதேச போட்டிகளில் சரியான ஃபார்மில் இல்லாமல் இருந்துவந்த விராட் கோலி, டி20 போட்டிகளிலும் ஒருநாள் போட்டிகளிலும் பழைய ஃபார்மிற்கு திரும்பி சதங்களையும் அடித்துவிட்டார்.
கிட்டத்தட்ட 3 வருடங்களாக டெஸ்ட் போட்டிகளில் சதம் அடிக்க முடியாமல் இருக்கிறார். இந்த வறட்சியை தீர்ப்பதற்கு வருகிற பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரை விராட் கோலி பயன்படுத்தி கொள்வார் என்று பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
மேலும் கடைசி மூன்று பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விராட் கோலி அவரது தரத்திற்கு நிகராக பேட்டிங்கில் செயல்படவில்லை. அவரது சராசரி மற்றும் ஸ்கோர் இரண்டும் குறைவாகவே இருக்கிறது. அதையும் சரிசெய்வதற்கு இந்த டெஸ்ட் தொடரை பயன்படுத்திக் கொள்வார் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்நிலையில் விராட் கோலிக்கு இரண்டு பலவீனங்கள் இருக்கின்றன. ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சாளர்கள் இந்த பலவீனங்களை அவர்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வதற்கு முன்னர் விராட் கோலி சரி செய்துகொள்ள வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார் இந்திய அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர். தற்போது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் பயிற்சியாளராகவும் இவர் இருக்கிறார்.
சஞ்சய் பாங்கர் பேசியதாவது: “விராட் கோலி ஸ்பின்னர்களுக்கு எதிராக இறங்கி அடிப்பது அல்லது ஸ்வீப் அடிப்பது கிடையாது. இந்த இரண்டும் மிகப்பெரிய பலவீனமாக இருக்கிறது. சமீபகாலமாக அவரை அடிக்கடி ஸ்பின்னர்கள் விக்கெட் எடுப்பதற்கு இதுதான் காரணமாகவும் இருக்கிறது. இதைப் பயன்படுத்தி நேதன் லையன் விராட் கோலியின் விக்கெட் எடுப்பதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கின்றன.
தற்போது இந்திய அணியில் இருக்கும் அதீத அனுபவம்மிக்க வீரர்களில் விராட் கோலியும் ஒருவர். ஆகையால் இவரது விக்கெட் எத்தகைய முக்கியமானது என்று அணியினரும் ரசிகர்களும் அறிவோம். எளிதாக விக்கெட்டை விட்டு விடக்கூடாது.” என்றார்.