ஆஸ்திரேலியா மண்ணில் அதிக சதம் அடித்த இந்திய வீரர்: சச்சின் சாதனையை சமன் செய்த கோலி
ஆஸ்திரேலிய மண்ணில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 6 சதங்கள் அடித்து சச்சின் சாதனையை சமன் செய்துள்ளார் இந்திய வீரர் விராட் கோலி
இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான 2-ஆவது டெஸ்ட் போட்டி பெர்த் மைதானத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
இதையடுத்து களமிறங்கிய அந்த அணி 2-ஆவது நாளில் முதல் இன்னிங்ஸில் 326 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. பின்னர் களமிறங்கிய இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் ஆடி வருகிறது.
இப்போட்டியில் அபாரமாக ஆடி வந்த கேப்டன் விராட் கோலி, 3-ஆம் நாள் ஆட்டத்தின் போது சதமடித்தார். இது டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் பதிவு செய்த 25-ஆவது சதமாகும். மொத்தம் 218 பந்துகளைச் சந்தித்து 11 பவுண்டரிகளின் உதவியுடன் சதமடித்தார்.
இதனுடன் பிராட்மேன், கவாஸ்கர் மற்றும் சச்சின் ஆகியோருக்கு அடுத்து சாதனையும் படைத்தார். அதன் விவரம் பின்வருமாறு:
குறைந்த இன்னிங்ஸ்களில் 25 சதங்களைப் பதிவு செய்த பேட்ஸ்மேன்கள்:
- டான் பிராட்மேன் – 68
- விராட் கோலி – 127
- சச்சின் டெண்டுல்கர் – 130
- சுனில் கவாஸ்கர் – 138
- மேத்யூ ஹைடன் – 139
- கேரி சோபர்ஸ் – 147
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிக சதமடித்த இந்திய வீரர்கள்:
- சச்சின் டெண்டுல்கர் – 11
- சுனில் கவாஸ்கர் – 8
- விராட் கோலி – 7
- விவிஎஸ்.லஷ்மண் – 6
- கே.விஸ்வநாத், முரளி விஜய் – 4
பெர்த் டெஸ்ட் போட்டியில் அதியற்புதமாக ஆடிய விராட் கோலி 123 ரன்களில் பிடிக்கப்படாத கேட்சுகு தவறாக அவுட் கொடுக்கப்பட்டு வெளியேறினார்.
கமின்ஸ் வீசிய பந்தை விராட் கோலி தன் உடலுக்கு சற்று தள்ளி மட்டையை நீட்டி ட்ரைவ் ஆட முயன்றார், ஆனால் வலது கையை தளர்த்தியதால் பீல்டர் கைக்கு அது கிளீனாகச் செல்லவில்லை.
ஹேண்ட்ஸ்கம்ப் விரல்கள் பந்துக்கு அடியில் இருந்ததா? அல்லது பிட்ச் ஆனபிறகு எடுத்து விட்டு கேட்ச் என்று சாதித்தாரா என்று புரியவில்லை. விராட் கோலி அது நிச்சயம் அவுட் இல்லை என்று சந்தேகம் எழுப்ப 3வது நடுவருக்கு அப்பீல் செய்யப்பட்டது. 3வது நடுவர் நீஜல் லாங்.
அப்பீல் செய்யும் போது களநடுவர் தன என்ன நினைக்கிறார் என்பதை கூறியாக வேண்டும், அவர் அவுட் என்று ஒரு சாஃப்ட் சிக்னல் கொடுத்தார். காரணம் பீல்டர் தான் கேட்ச் பிடித்ததாக உரிமை கொண்டாடுகிறார், ஆகவே அதனடிப்படையில் அவுட் என்றார். அப்படியிருக்கையில் எதற்கு 3வது நடுவரிடம் மேல்முறையீடு செய்ய வேண்டும்?
அப்படி மேல்முறையீடு செய்தால் தெளிவான முடிவுகள் இருந்தால்தான் கள நடுவரின் சாஃப்ட் சிக்னலுக்கு எதிராக 3வது நடுவர் அவுட்டோ, நாட் அவுட்டோ வழங்க முடியும். ஆனால் வீடியோ ரீப்ளேயில் பந்து தரையில் பட்டு கையில் சென்றதாகத் தெளிவாகவே காட்டியது, இமேஜ் பெரிதாகப்பட்டு காட்டப்பட்ட போதும் தரையில் பட்ட பிறகுதான் கைக்குச் சென்றது.
இப்போது பீல்டருக்கு நிச்சயமாகத் தெரியும் தான் கேட்ச் எடுத்தோமா இல்லையா என்று? கேட்ச் எடுத்ததில் சந்தேகம் இருப்பதாக வீரர் தெரிவித்தால் அது மோசடியே. அப்படி ஹேண்ட்ஸ்கம்ப் தெரியவில்லை என்றால் களநடுவர் எப்படி சாஃப்ட் சிக்னல் அவுட் கொடுக்க முடியும்?
நடுவர் சாஃப்ட் சிக்னல் அவுட் கொடுத்ததுதான் ஆதாரங்கள் சரியாக இல்லாத போது இறுதியானது என்றால் எதற்கு 3ம் நடுவர் ரெஃபரல் அமைப்பு? சரி ஆதாரங்கள் விராட் கோலிக்குச் சாதகமாக இருக்கும் போது சந்தேகத்தின் பலன் பேட்ஸ்மெனுக்கு அளிக்கப்பட வேண்டுமென்பதுதானே கிரிக்கெட்டின் நடைமுறை விதி? ஏனெனில் பேட்ஸ்மெனுக்கு ஒருமுறை அவுட் கொடுத்தால் அவ்வளவுதான் ஆட்டத்தின் போக்கே மாறிவிடும் ஆனால் பவுலருக்கு அடுத்தடுத்து அதே பேட்ஸ்மெனை வீழ்த்த வாய்ப்புள்ளது. ஆகவேதன சந்தேகத்தின் பலன் பேட்ஸ்மெனுக்கு என்பது நடைமுறை விதி.