விராட் கோஹ்லியை யாருக்கும் பிடிக்காது; சீண்டி பார்த்த ஆஸ்திரேலிய கேப்டன்
உங்களுக்கு அவர் தான் கேப்டன் தான் என்றாலும், ஒரு மனிதராக விராட் கோஹ்லி உங்களால் விரும்ப முடியாது என முரளி விஜய்யிடம் டிம் பெய்ன் கூறும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
ஆஸ்திரேலியாவுடன் டெஸ்ட் போட்டி என்றாலே களத்தில் ‘ஸ்லெட்ஜிங்’, ‘சீண்டல்கள்’, ‘கிண்டல்களுக்குக்’ குறை இருக்காது. ஆனால், பந்தை சேதப்படுத்தும் விவகாரத்துக்குப் பின், அவமானப்பட்ட ஆஸ்திரேலிய வீரர்கள் அடிலெய்டு டெஸ்டில் ஒழுக்கம் காத்தனர்.
ஆனால் தங்களின் இயல்பான பழக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் பெர்த் டெஸ்ட் போட்டியில் மீண்டும் இயல்புக்குத் திரும்பினார்கள்.
பெர்த்தில் நடந்து வரும் 2-வது டெஸ்ட் போட்டியில் 3-வது நாளான நேற்று இந்தியக் கேப்டன் விராட் கோலிக்கும், ஆஸி. கேப்டன் பெய்னுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆட்ட நேர முடிவில் பும்ரா வீசிய பந்தை பெய்ன் எதிர்கொண்டார். அப்போது அவரின் பேட்டின் அருகே பந்து சென்று ரிஷப் பந்த் கைகளில் தஞ்சம் புகுந்தது.
உடனே கேப்டன் கோலி, ரிஷப்பந்த், பும்ரா அனைவரும் நடுவரிடம் சத்தமாக அப்பீல் செய்தனர். ஆனால் நடுவர் தர்மசேனா அவுட் வழங்கவில்லை. அப்போது பெய்னும், கோலியும் ஒருவருக்கு ஒருவர் காட்டமாக பேசிக்கொண்டனர்.
“நீ ஆட்டமிழந்துவிட்டால், தொடர் 2-0 என்று வென்றுவிடுவோம்” என்று கோலி தெரிவித்தார். அதற்கு பெய்ன் “வேண்டுமென்றால் முதலில் நீங்கள் பேட் செய்திருக்கலாமே, தலைக்கனம் பிடித்தவனே” என்று பதில் அளித்தார். இதனால் இருவரும் அருகருகே சென்றபோது சக வீரர்கள் சத்தமிட்டதால் ஒதுங்கிச் சென்றனர். இதைப்பார்த்த ரசிகர்களும் சத்தமிட்டு ஆரவாரம் செய்தனர்.
இதே சூழல் இன்றும் நீடித்தது. பும்ரா 71-வது ஓவரை வீசினார். அப்போது பீல்டர்களை பெய்னுக்கு அருகே நிற்குமாறு விராட் கோலி மாற்றி அமைத்தார். இதைப் பார்த்த பெய்ன், விராட் கோலியிடம் ஏதோ கூற இருவருக்கும் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டது.
நீ தானே பொறுமை இழந்து நேற்று பேசினாய், இன்று கூல்லாக இருக்க முயற்சி செய் என்று கோலியிடம் பெய்ன் கூறினார்.
அதற்கு பதில் அளித்த கோலி, “வா வந்து பேட் செய், நீ தானே கேப்டன், டிம் நீ தானே கேப்டன்” என்று கூறிக்கொண்டு அருகே சென்றார். அப்போது இரு கேப்டனும் மார்போடு உரசிக் கொள்ளும் வகையில் நெருக்கமாக நின்று பேசினார்கள். இதன் பின் நடுவர்கள் தலையிட்டு இருவரையும் எச்சரித்து அனுப்பினர்.
இதனையடுத்து ஸ்டெம்பிற்கு பின்னால் போய் நின்றிருந்த டிம் பெய்ன், பேட்டிங்கில் நின்றிருந்த முரளி விஜய்யிடம், “முரளி விராட் கோஹ்லி உங்களுக்கு கேப்டன் தான், ஆனால் ஒரு மனிதனாக நிச்சயமாக அவரை உங்களால் விரும்ப முடியாது” என்று கூறினார். டிம் பெய்ன்னின் இந்த வார்த்தைகள் ஸ்டெம்ப் மைக்கில் பதிவாகிய நிலையில் இந்த வீடியோவும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.