மேற்கிந்தியத் தீவுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி T20 தொடரை முழுமையாகக் கைப்பற்றிய கையோடு, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரையும் வென்றது. இந்த தொடரின் முதல் போட்டி மழையால் ரத்தானது. இரண்டாவது போட்டியில் இந்தியா வென்றது. நேற்று மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி போர்ட் ஆப் ஸ்பெயினில் நடைபெற்றது.
முதலில், பேட்டிங் செய்த மேற்கிந்தியத் தீவுகள் அணி 35 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 240 ரன்கள் எடுத்தது. டக்வொர்த் லீவிஸ் முறைப்படி இந்திய அணிக்கு 35 ஓவர்களில் 255 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. தொடர்ந்து, இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி 32.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 256 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் 4 விக்கெட்கள் வீழ்த்தினால் அதிவேகமாக 100 வீழ்த்திய இந்திய வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியிருப்பார்.இதனால் குல்தீப் யாதவ் நேற்றைய ஆட்டத்தின் பிளேயிங் லெவனில் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவருக்குப் பதில் சாஹல் களமிறக்கப்பட்டார். கோலியின் இந்த செயல் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேற்றைய போட்டியில் குல்தீப் விளையாடிருந்தால் அவர் அந்த சாதனையை நிகழ்த்த வாய்ப்பு கிடைத்திருக்கும். இதை அறிந்தும் கோலி, குல்தீப்க்கு வாய்ப்பு அளிக்கவில்லை. குல்தீப் யாதவ் படைக்கவிருந்த சாதனையைக் கோலி சதி செய்து தடுத்ததாக கிரிக்கெட் வட்டாரங்களில் தகவல்கள் உலா வருகின்றன. இதன்காரணமாக, குல்தீப் யாதவ் இந்த சாதனையைப் படைக்க மேலும் சில மாதங்கள் காத்திருக்க வேண்டும்.
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. முதலாவது ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டது. 2-வது போட்டியில் இந்திய அணி 59 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது.
அடுத்து இவ்விரு அணிகள் இடையே 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் நடக்கிறது. இதில் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆன்டிகுவாவில் வருகிற 22-ந் தேதி தொடங்குகிறது.
வெற்றிக்கு பிறகு இந்திய கேப்டன் விராட்கோலி அளித்த பேட்டியில், ‘2 ஆட்டங்களிலும் ஸ்ரேயாஸ் அய்யர் என்னுடன் இணைந்து பேட்டிங் செய்தார். அவர் நம்பிக்கையுடன் ஆடிய விதம் பார்ப்பதற்கு அருமையாக இருந்தது. எனக்கு எந்த வாய்ப்பு கிடைத்தாலும் சூழ்நிலைக்கு தகுந்தபடி விளையாடி அணியை வெற்றி பெற வைப்பதில் கவனம் செலுத்துவேன். அதற்காக ரிஸ்க் எடுப்பேன். அதனை தான் ஸ்ரேயாஸ் அய்யரும் செய்தார்.
தோல்வி குறித்து வெஸ்ட்இண்டீஸ் கேப்டன் ஜாசன் ஹோல்டர் கூறுகையில் ‘நாங்கள் நல்ல தொடக்கம் கண்டோம். ஆடுகளம் மிகவும் நன்றாக இருந்தது. மழை பெய்த பிறகு ஈரப்பதம் இருந்ததால் நாங்கள் ஆடுவதற்கு கடினமாக இருந்தது. விராட்கோலி (11 ரன்னில்) கொடுத்த கேட்ச் வாய்ப்பை நாங்கள் நழுவவிட்டோம். அதற்குரிய விலையை கொடுக்க வேண்டி இருந்தது. எல்லா சிறப்பும் அவரது பேட்டிங்குக்கே சாரும்’ என்றார்.