ரஹானே மற்றும் புவனேஷ் குமார் அற்புத திறமையாளர்கள் என வீரேந்திர சேவாக் பாராட்டியுள்ளார்.
இந்தியா-தென்னாப்ரிக்கா இடையேயான 3வது டெஸ்ட் போட்டி தென்னாப்ரிக்காவின் ஜோகன்ஸ்பெர்க்கில் உள்ள நியூ வாண்டெரெர்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் இன்னிங்க்ஸில் இந்தியா 76.4 ஓவர்களில் 187 ரன்கள் எடுத்தது. தென்னாப்ரிக்க அணி, 65.5 ஓவர்களில் 194 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இந்நிலையில் 3வது நாளான இன்று இந்தியா 2வது இன்னிங்க்ஸ் பேட்டிங்கை தொடர்ந்து விளையாடி வருகிறது. 75.3 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 238 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியா தடுமாறிய போது ரஹானே மற்றும் புவனேஸ்குமார் நிலைத்து ஆடி ரன்களை உயர்த்தினர். இருப்பினும் 48 ரன்களில் ரஹானே விக்கெட்டை பறிகொடுத்தார்.
இதற்கிடையே சிறப்பாக விளையாடிய ரஹானே மற்றும் புவனேஷ்குமார் ஆகிய இருவரையும் முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக் ட்விட்டரில் பாராட்டியுள்ளார்.
அதில் “அற்புதமான திறமையை வெளிப்படுத்தி ரஹானே மற்றும் புவனேஷ்குமார் உண்மையில் கலக்கி விட்டனர். தென்னாப்ரிக்கா சிறப்பாக விளையாடிய நிலையிலும், இருவரின் செயல்களால் ஒவ்வொரு கிரிக்கெட் பிரியரும் பெருமை கொள்வார்கள்” என குறிப்பிட்டுள்ளார்.