தேசிய அணிக்கு திரும்ப விருப்பம் இல்லை என திடுக்கிடும் பேட்டியளித்துள்ளார் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்.
பாகிஸ்தான் அணியின் கேப்டனாக திகழ்ந்தவர் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சர்பராஸ் அகமது. இவரது தலைமையிலான பாகிஸ்தான் அணி 2017 ஐசிசி சாம்பியன்ஷிப் தொடர் இறுதிப் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. அப்போது பாகிஸ்தான் ரசிகர்களாலும், அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்தால் பாராட்டப்பட்டு, புகழின் உச்சிக்கு சென்றார்.
ஆனால், இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் அவர் மீது கடும் விமர்சனம் வைக்கப்பட்டது. இறுதியாக டி20 மற்றும் டெஸ்ட் போட்டிக்கான பாகிஸ்தான் அணியின் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். மேலும், அணியில் இருந்தும் வெளியேற்றப்பட்டார்.
கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டது குறித்து தனது மனநிலையை விவரித்துள்ளார் சர்பராஸ் அகமது.
இதுகுறித்து சர்பராஸ் அகமது கூறுயதாவது:
“கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட இருக்கிறோம். அதற்கான மனதளவில் தயாராகிக் கொள்ள வேண்டும் என நான் முன்னமே நினைத்துக்கொண்டு இருந்தேன்.
மூத்த வீரர்கள் பலர் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடும்படி எனக்கு ஆலோசனை வழங்கினார்கள். சில நேரங்களில் ஓய்வு என்பது அவசியம். நான் மூன்று ஆண்டுகள் தொடர்ச்சியாக மிகவும் நெருக்கடியான கிரிக்கெட்டை விளையாடியுள்ளேன். இதனால், தற்போது சிலகாலம் குடும்பத்தினருடன் செலவழிக்க இதனை பயன்படுத்திக்கொள்கிறேன்.
தற்போது என்னுடைய முழுக்கவனம், உள்ளூர் கிரிக்கெட்டை பற்றிதான். பாகிஸ்தான் தேசிய அணிக்கு திரும்புவதை பற்றி யோசிக்கவில்லை. என்னுடைய ஆட்டத்தில் கவனம் செலுத்த விரும்புகிறேன். எப்போது என்னை அழைக்கிறார்களோ, அப்போது என்னுடைய ஆட்டத்தை வெளிப்படுத்த தயாராக இருக்கிறேன்” என்றார்.