திருமணங்கள் பொதுவாக சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்பார்கள். ஆனால் இங்கு சற்று வித்தியாசம்.. திருமணம் நிச்சயமானது கிரிக்கெட் மைதானத்தில்..
இந்தியா- இங்கிலாந்து இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி லண்டன் லார்ட்சில் நேற்று நடைபெற்றது. அப்போது யார் வெற்றி பெறுவார்கள் என ரசிகர்கள் ஆவலுடன் போட்டியை பார்த்துக் கொண்டிருந்தனர். போட்டியை காண்பதற்காக சரண் கில் என்பவர் தனது தோழியான பவான் என்பவருடன் வந்திருந்தார். இருவரும் ஏற்கெனவே நல்ல நண்பர்கள். இருவரும் கேலரியில் அமர்ந்துகொண்டு போட்டியை ரசித்துக் கொண்டிருந்தனர்.
போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில் சரண் தன் கையில் வைத்திருந்த ஓவர் கோட்டை தன் சீட்டில் வைத்து விட்டு பவான் முன் எழுந்து நிற்கிறார். ஆனால் பவானுக்கு எதுவும் புரியவில்லை. சிறிய வெட்கம் கலந்த புன்னகையே பதிலாக தருகிறார். தொடர்ந்து சரண், பவான் முன் முட்டி போட்டு ‘என்னை திருமணம் செய்து கொள்வாயா..? எனக் கேட்கிறார். அத்தோடு மட்டுமில்லாமல் தான் வாங்கிக் கொண்டு வந்த மோதிரத்தையும் பரிசாக வழங்குகிறார்.
இவை கேமிராவில் படம் பிடிக்கப்பட்டு, பிக் ஸ்க்ரீனிலும் ஒளிபரப்பானது. வீரர்களும் அதனைக் கவனித்தனர். கமெண்ட்ரியில் ‘Decision Pending’ என்ற வர்ணிக்க, இதனை சற்றும் எதிர்பார்க்காத அந்தப் பெண், மோதிரத்தை பார்த்தவுடன் மகிழ்ச்சியின் உச்சிக்கே சென்று, ‘Yes’ சொல்லி அந்த நபரை தனது வாழ்க்கை துணையாக ஏற்றுக் கொண்டார். பவானும் வெட்கம் கலந்த அன்பில் அவரின் காதலை ஏற்றுக் கொள்கிறார். பின்னர் சரண் மோதிரத்தை பவான் கையில் அணிவிக்கிறார். இருவரும் அன்பில் ஆரத் தழுவிக் கொள்கின்றனர்.
சுற்றி இருந்தவர்கள் அனைவரும் அவர்களையே பார்த்தப்படி கைத்தட்டுகின்றனர். மொத்த சம்பவமும் வீடியோவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது. மேலும் பலரும் அந்த ஜோடிகளுக்கு தங்களது வாழ்த்தினை தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே இந்த போட்டியில் இங்கிலாந்து அணி 86 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது. எனவே தற்போது 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் சமநிலையில் உள்ளன. இவ்விரு அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி வரும் 17-ஆம் தேதி நடைபெற உள்ளது.