ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் தொடரின் 4வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 497 ரன்கள் குவிந்தது. ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்மித் இரட்டை சதம் அடித்து இங்கிலாந்து பவுலர்களை துவம்சம் செய்துள்ளார்.
இங்கிலாந்து ரசிகர்கள், ஆஸ்திரேலியாவின் ஸ்மித் மற்றும் வார்னரை மைதானத்தில் ஏமாற்றுக்கார் (cheater) என்று அழைப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் ஸ்மித் மற்றும் வார்னர் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஓராண்டு கிரிக்கெட் விளையாட தடைவிதிக்கப்பட்டது.
ஓராண்டு தடைக்கு பின்னர் அணிக்கு திரும்பிய இருவரும் நல்ல ஃபார்மில் உள்ளனர். வார்னர் உலகக் கோப்பையில் சிறப்பான ஆட்டத்தையும், ஸ்மித் ஆஷஸ் தொடரில் இங்கிலாந்தை துவம்சம் செய்து வருகிறார்.
இந்நிலையில் மான்செஸ்டர் மைதானத்தின் ஓய்வு அறையிலிருந்து ஆஸ்திரேலிய வீரர்கள் ஃபீல்டிங் செய்ய களத்திற்கு வந்தனர். அப்போது வார்னர் வெளியே வரும்போது ரசிகர் ஒருவர் ஏமாற்றுக்கார் என்று அழைத்தார். இதற்கு சற்று கோபமடையாத வார்னர் அவரை பார்த்து உற்சகமாக இரண்டு கைகளையும் தூக்கி மகிழ்ச்சியுடன் விடைபெற்றார்.
‘ஏமாற்றுக்காரா’ என்று அழைத்த ரசிகரின் மூக்கை உடைக்கும் விதமாக வார்னரின் செயல் இருந்தது என்றே சொல்லலாம். அந்த ரசிகர் மீது அவர் எந்தவித கோபமின்றி சிரித்தபடியே அங்கிருந்து விடைபெற்றது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. மற்றவர்கள் ஆரவார கூச்சலிட்டு வார்னருக்கு தங்களது ஆதரவை மைதானத்தில் வெளிப்படுத்தனர்.
பால்டேம்பரிங் விவகாரத்துக்குப் பிறகு மீண்டும் வந்து ஆஷஸ் தொடரில் பல சாதனைகளை ஸ்டீவ் ஸ்மித் உடைத்து வரும் நிலையில் அதே விவகாரத்தில் சிக்கி மீண்டும் வந்த ஆஸ்திரேலியா தொடக்க வீரர் டேவிட் வார்னர் தட்டுத் தடுமாறி வருகிறார்.
நடைபெற்று வரும் மான்செஸ்டர் 4வது ஆஷஸ் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் பிராட் வீசிய டெஸ்ட் போட்டியின் முதல் ஓவரின் 4வது பந்தை ஆட வேண்டாம் என்று தாமதமாக முடிவெடுத்து மட்டையை விலக்குவதற்குள் எட்ஜ் ஆகி பேர்ஸ்டோ கையில் போய் உட்கார்ந்தது. வார்னர் டக் அவுட் ஆனார்.
தற்போது இன்று (சனிக்கிழமை, செப்.7) 2வது இன்னிங்ஸில் 196 ரன்கள் முன்னிலை என்ற வலுவான நிலையில் இறங்கிய போதும் பிராட் பந்தை அவரால் சரியாக ஆட முடியவில்லை.
முதல் ஓவரின் 6வது பந்தில் டேவிட் வார்னர் எல்.பி.ஆகி டக் அவுட் ஆகி ஸ்கோரரைத் தொந்தரவு செய்யாமல் தொடர்ச்சியாக 3வது முறையாக ஆட்டமிழந்து பெவிலியன் சென்றார். இது இத்தனைக்கும் நேர் பந்து என்பது குறிப்பிடத்தக்கது.
ஆக, இந்த டெஸ்ட் போட்டியில் ‘ஜோடி’ (Pair) என்று அழைக்கப்படும் இருமுறை டக் அவுட் ஆனதோடு கடந்த டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்ஸ் டக் அவுட்டையும் சேர்த்து ஹாட்ரிக் டக் அவுட் ஆகியுள்ளார்.
அதுவும் 6வது முறையாக இந்தத் தொடரில் பிராட் பவுலிங்கிலேயே விக்கெட்டைக் கொடுத்து அவரின் ‘செல்லப்பிள்ளை’ ஆனார் டேவிட் வார்னர். இந்தத் தொடரில் ஸ்டூவர்ட் பிராடின் 93 பந்துகளைச் சந்தித்த வார்னர் 80 டாட்பால்களுடன் 32 ரன்களை மட்டுமே எடுத்து 6 முறை அவுட் ஆகியுள்ளார்.
தற்போது ஆஸ்திரேலியா வார்னர், ஹாரிஸ், லபுஷேன் விக்கெட்டுகளை இழந்து 24 ரன்களுடன் தடுமாறி வருகிறது, ஆனால் 196 ரன்கள் முதல் இன்னிங்ஸ் முன்னிலையுடன் சேர்த்து ஆஸ்திரேலியா தற்போது 220 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.இருப்பினும் இங்கிலாந்தின் பெரிய தலைவலியாகத் திகழும் ஸ்டீவ் ஸ்மித் கிரீசில் நிற்கிறார்.