நாங்க செஞ்சதுல எந்த தப்புமே கிடையாது; அதிரடியாக பேசிய ராகுல் டிராவிட் !!

இந்தியா நியூசிலாந்து அணிகள் மோதிய முதல் டெஸ்ட் டிராவில் முடிவடைந்தது. ஐந்தாம் நாளில் 9 விக்கெட்டுகளை இந்திய அணி எடுத்திருந்தபோது, அன்றைய நாள் முடிவடைய இன்னும் 52 பந்துகள் மீதம் இருந்தன. அதற்குள் ஒரு விக்கெட் வீழ்த்தி இருந்தால், இந்திய அணி வெற்றி பெற்றிருக்கலாம். அதனை செய்யத் தவறியதால், ஆட்டம் டிராவில் முடிந்து, தற்போது மிகப்பெரிய விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

அதாவது நான்காம் நாள் ஆட்டத்தின் போது, இந்திய அணி மீதம் 4 ஓவர்கள் இருக்கும் தருணத்தில் டிக்ளேர் செய்தது. இன்னும் முன்னமே டிக்ளேர் செய்திருந்தால், கூடுதல் ஓவர்கள் கிடைத்து, அதில் விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கக்கூடும் என்று பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.

இந்திய அணி கிட்டத்தட்ட 250 ரன்கள் முன்னிலை கடந்த பிறகு, டிக்ளேர் செய்திருக்கும் பட்சத்தில் மேலும் 10-20 ஓவர்கள் நியூசிலாந்து அணியை பேட்டிங் செய்ய வைத்து விக்கெட்டுகள் வீழ்த்தி அழுத்தம் கொடுத்திருக்கலாம் என்கிற பாணியில் விமர்சனங்கள் முன்வைத்திருந்தனர். இதற்கு பதிலளித்துள்ள ராகுல் டிராவிட் கூறுகையில்,

“டிக்ளேர் செய்ததில் எவ்வித தவறும் எனக்கு தெரியவில்லை. பிட்ச் நிலவரம் நான்காம் நாள் ஆட்டம் வரை, எவ்வித மாற்றமும் இல்லாமல் இருந்தது. மைதானம் முழுமையாக பந்துவீச்சிற்கு ஒத்துழைத்து இருந்தால் நீங்கள் கூறும் கருத்து சரியானதாக தெரிந்திருக்கும். ஆனால் ஐந்தாம் நாள் ஆட்டம் முடியும்வரை மைதானம் பந்துவீச்சிற்கு சரியாக ஒத்துழைக்கவில்லை. எனவே 280 ரன்கள் என்பதே எளிதானதாக தெரிந்தது. இருப்பினும், டிக்ளேர் செய்து திட்டமிட்டபடி விளையாடினோம். அதில் எவ்வித தவறும் தெரியவில்லை. ஐந்தாம் நாளிலும் சுழல் பந்துவீச்சிற்கு மைதானம் கடினமாக இருந்ததை அனைவரும் பார்த்தோம். இத்தகைய இக்கட்டான சூழலில் நமது வீரர்கள் விக்கெட் வீழ்த்திய விதத்தை பாராட்டியாக வேண்டும். மற்றபடி குறை கூற எதுவுமில்லை.” என்று தனது கருத்தினை முன்வைத்தார்.

Mohamed:

This website uses cookies.