சரியா யூஸ் பண்ணாம, திறமையை வேஸ்ட் பண்றீங்க – இந்திய வீரருக்கு ஆதரவாக பேசிய முன்னாள் வேகப்பந்துவீச்சாளர்!

இவரைப் போன்ற ஒருவரை அணியில் வைத்துக் கொண்டு ஏன் கஷ்டப்படுகிறீர்கள் என இந்திய பவுலருக்கு ஆதரவாக பேசியுள்ளார் முன்னாள் இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் டிம் பிரஸ்னன்.

இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து பேச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா, ஒவ்வொரு தொடரிலும் எதிரணிக்கு சிம்மசொப்பனமாக திகழ்ந்து வருகிறார். தனது நேர்த்தியான யார்க்கர் மற்றும் பேட்ஸ்மேன்களை குழப்புவது என்று இரண்டிலும் கைதேர்ந்தவர் பும்ரா. கடந்த சில மாதங்களாக காயம் காரணமாக சர்வதேச போட்டிகளில் விளையாடாமல் இருந்தார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் மீண்டும் இந்திய அணிக்குள் வந்தார்.

ஆஸ்திரேலியாவுடன் முதல் டி20 இந்திய அணி 208 ரன்கள் அடித்தும் அதை கட்டுப்படுத்த முடியாமல் தோல்வியை தழுவியது. போட்டியில் பும்ரா இருந்தும் அவரை பிளேயிங் லெவனில் எடுக்கவில்லை. இந்த தவறை உணர்ந்து அடுத்த
போட்டியில் அவரை எடுத்தனர். அதற்கு கைமாறு செய்யும் விதமாக கேப்டன் பின்சை யார்க்கர் மூலம் போல்ட் ஆக்கினார்.

இப்படி ஒரு வீரரை வெளியில் வைத்துக் கொண்டு எதற்காக இந்திய அணி பந்துவீச்சில் கஷ்டப்பட வேண்டும் என்று பேசியுள்ளார் இங்கிலாந்து அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் டிம் ப்ரஸ்னன்.

“பும்ரா இல்லாமல் இந்திய அணி வித்தியாசமாக தெரிகிறது என்று நான் எண்ணவில்லை. ஆனால் 208 ரன்களை கட்டுப்படுத்த வேண்டும் என்றால், நீங்கள் நிச்சயமாக பும்ரா போன்ற வீரரை அணியில் எடுக்க வேண்டும். மற்ற வீரர்கள் ஓவருக்கு 12 ரன்களுக்கும் அதிகமாக விட்டுக் கொடுக்கும் பொழுது, பும்ரா 7-9 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுப்பார். அந்த சமயம் அவர் அணியில் இருந்தால் நிச்சயம் இந்திய அணியால் வென்றிருக்க முடியும். மிகப்பெரிய மாற்றத்தையும் ஏற்படுத்தி இருக்க முடியும்.

பும்ரா போன்ற பந்துவீச்சாளரால் மிகப்பெரிய தாக்குதலை ஏற்படுத்த முடியும். இவரது பந்துவீச்சை நினைக்கும் நேரத்தில் சிக்சர் அடிக்க இயலாது என்பதால் பேட்ஸ்மேன்கள் கூடுதல் அழுத்தத்திற்கு உள்ளாவர். அந்த நேரத்தில் இந்திய அணி தாக்குதலை நடத்தி வெற்றி பெற முடியும். எனது பார்வையில், பும்ரா அணியில் இருந்தால் முற்றிலும் மாறுபட்ட இந்தியாவாக தெரிகிறது. அவரைப் போன்ற வீரருக்கு உரிய கவனம் செலுத்தி பாதுகாக்க வேண்டும்.” என்று ப்ரஸ்னன் பும்ராவிற்கு ஆதரவாக பேசினார்

Mohamed:

This website uses cookies.