அடுத்த போட்டியில் இப்படி நடந்தால், அமைதியாக உட்கார்ந்து பார்த்துக்கொண்டிருக்க மாட்டோம்: டிம் பெய்ன்

பெர்த்தில் இரண்டாவது டெஸ்ட் முடிவில் முதுகில் உற்சாகமாகத் தட்டிக் கொடுத்த ஆஸ்திரேலிய கேப்டன் பெய்னிடம் கோலி நடந்து கொண்ட விதத்தை நெட்டிசன்கள் விமர்சித்துள்ளனர்.

பெர்த்தில் இந்தியா  – ஆஸ்திரேலியாவுக்கு இடையே நடந்த 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை 146 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது ஆஸ்திரேலிய அணி.

இரு இன்னிங்ஸிலும் சேர்த்து 8 விக்கெட்டுகள் வீழ்த்திய நாதன் லயன் ஆட்ட நாயகன் விருது பெற்றார். இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன், இந்திய கேப்டன் விராட் கோலி ஆகியோருக்கு இடையே தொடர்ந்து வார்த்தை மோதல் நடந்தது. இதனைத் தொடர்ந்து  நடுவர்கள் எச்சரித்து அனுப்பிய நிலையில், ஆட்டம் முடிந்ததும் இரு அணி வீரர்களும் கைகுலுக்கிக் கொண்டு விடை பெற்றனர்.

அப்போது ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பெய்ன் உற்சாகமாக இந்திய அணி கேப்டன் கோலிக்கு கை கொடுத்து முதுகைத் தட்டிக் கொடுக்க, கோலியோ கை கொடுத்துவிட்டு பெய்னைத் திரும்பிக் கூடப் பார்க்காமல் ஒருவித இறுக்கமான முகத்துடன் அவரைக் கடந்து சென்றார்.

தற்போது இதுகுறித்த வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

கேப்டன் கோலியின்  அணுகுமுறை சரியல்ல. போட்டி முடிந்து விட்டது, வெற்றி தோல்வி  விளையாட்டில் சகஜம். போட்டி முடிந்தவுடன் அதனை மறந்து எதிர் அணியைப் பாராட்ட வேண்டும் என்று அந்த வீடியோவைக் குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

சிலர் கோலி செய்யும் அனைத்திற்கு குற்றம் கண்டுபிடிக்காதீர்கள் என்று கோலிக்கு ஆதரவாகவும் பதிவிட்டுள்ளனர்.

அதே சமயத்தில் போட்டி முடிந்தவுடன் இந்திய அணி வீரர்களுடன் நட்புறவோடு கை குலுக்கிய ஆஸ்திரேலிய கேப்டன்  பெய்னுக்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து ஆஸி. முன்னாள் வீரர் மைக் ஹசி வர்ணனையில் பேசுகையில், ”கோலி கட்டுப்பாட்டை இழந்து செயல்படுகிறார். இதுபோன்ற செயலை இப்போது நான் விரும்பவில்லை” என்றார்.

இரண்டு கேப்டன்களுக்கும் இரண்டு முறை நடைபெற்ற வார்த்தை மோதலைத் தொடர்ந்து, கோலி தனது கோபத்தைக் குறைத்துக்கொள்ள வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்தனர்.

இந்நிலையில் பிரபல பாலிவுட் நடிகர் நசீருதின் ஷா கோலியை உலகின் ஒழுக்கக் கேடான விளையாட்டு வீரர் என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ள நசீருதின் ஷா, ”விராட் கோலி உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன் மட்டுமல்ல, ஒழுக்கக் கேடான விளையாட்டு வீரரும் கூட. கோலியின் அகந்தை மற்றும் மோசமான நடத்தைகள் அவரின் கிரிக்கெட் திறமையை மறைத்துவிடுகின்றன. மேலும் எனக்கு நாட்டை விட்டு வெளியேறும் எந்த எண்ணமும் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, இந்திய பேட்ஸ்மேன்களை விரும்பாமல், வெளிநாட்டு வீரர்களை விரும்பும் ரசிகர்கள் இந்தியாவில் வசிக்கத் தேவையில்லை என்று சர்ச்சைக்குரிய வகையில் விராட் கோலி கருத்து தெரிவித்திருந்தார். இதைக் கிண்டல் செய்யும்விதமாகவே ஷா இவ்வாறு தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இணையவெளியில் நசீருதின் ஷாவின் கருத்துக்கு ஆதரவாகவும் எதிராகவும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. கோலியின் ரசிகர்களிடையே நசீருதின் ஷாவின் கருத்து கடுமையான கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

Sathish Kumar:

This website uses cookies.