“இங்கிலாந்து அணி அரை இறுதிக்குள் நுழையாமல் தோற்கவேண்டும் என்று அனைவரும் நினைக்கிறார்கள்” என துவக்க வீரர் ஜானி பேர்ஸ்டோ கூறியுள்ளார். இதற்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன்.
உலக கோப்பை தொடர் துவங்குவதற்கு முன்பாக இந்தியா, இங்கிலாந்து அணிகள் கோப்பையை வெல்லும் அணிகளாக கருதப்பட்டது. இந்திய அணி அத்தகைய கருத்திற்கு தகுந்தார்போல் ஆடி வருகிறது. ஆனால் இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியா, இலங்கை ஆகிய இரு அணிகளிடமும் தொடர்ச்சியான தோல்வியை தழுவியது. அதற்கு முன்பாக பாகிஸ்தான் அணியிடமும் தோல்வியை தழுவியது இதனால் இங்கிலாந்து அணியின் அரைஇறுதி வாய்ப்பு இழுபறியில் நீடிக்கிறது.
இங்கிலாந்து அணி ஆடிய 7 லீக் போட்டிகளில் நான்கில் மட்டுமே வென்றுள்ளது. மூன்று போட்டிகளில் தோல்வியைத் தழுவி புள்ளி பட்டியலில் நான்காம் இடத்தில் இருக்கிறது. அடுத்து வரும் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுடனான போட்டியில் கட்டாயம் வென்றாக வேண்டும் என்ற சூழ்நிலையில் இருக்கிறது.
இதுகுறித்து தனது கருத்தினை தெரிவித்த இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் கூறுகையில், இங்கிலாந்து அணியின் தரத்திற்கு இந்த உலக கோப்பை தொடர் சற்று மோசமாகவே இருந்துள்ளது. வீரர்கள் தங்களது முழு முயற்சியில் ஈடுபடவில்லை என்றார்.
ஜானி பேர்ஸ்டோ காரசாரமான கருத்து
இதனை ரேடியோ நிகழ்ச்சி ஒன்றில் தெரிந்துகொண்ட ஜானி பேர்ஸ்டோ மைக்கேல் வாகனின் கருத்துக்கு எதிர் கருத்தை முன்வைத்துள்ளார். “இங்கிலாந்து அணி இந்த உலகக் கோப்பையில் தோல்வியைத் தழுவ வேண்டும் என காசை பெற்றுக்கொண்டு விமர்சனம் செய்கின்றனர். அந்த முடிவிற்காக காத்துக் கொண்டும் இருக்கின்றனர். அவர்களின் மூக்கை உடைக்கும் வண்ணம் வரும் போட்டிகளில் இங்கிலாந்து அணி செயல்படும். முட்டாள்தனமான கருத்திற்கு ஊடகங்களும் துணை நிற்கின்றன என்றார்.
மைக்கேல் வாகன் மீண்டும் பதிலடி
ஜானி பேர்ஸ்டோ வின் இந்தக் கருத்தை சற்றும் ஏற்றுக்கொள்ளாத அதற்குப் பதிலளிக்கையில், ஜானி பேர்ஸ்டோ வின் தவறான புரிதல் இது.. உலக கோப்பை துவங்குவதற்கு முன்பாக இதே ஊடகங்கள் தான் இங்கிலாந்து அணியை தலையில் தூக்கி வைத்து பேசினர். தொடர் தோல்வியை சந்தித்தால் எந்த ஒரு ஊடகமும் விமர்சிக்க தான் செய்யும்.
இத்தகைய விமர்சனத்தை நேர்மறையாக எதிர்கொண்டு அடுத்துவரும் இரண்டு போட்டிகளிலும் வெற்றியை பெற்று அரையிறுதிக்குள் சென்று நீங்கள் மீண்டும் உங்களை நிரூபிக்கலாம். நேர்மறையான மனநிலையுடன் முன்னேற முயற்சியுங்கள் அதைத்தான் நாங்களும் விரும்புகிறோம் என்றார்.
1999 ஆம் ஆண்டு உலகக் கோப்பைக்குப் பிறகு நியூசிலாந்து மற்றும் இந்திய அணியை உலக கோப்பை தொடர்களில் இங்கிலாந்து அணி வீழ்த்தியது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.