உலக கோப்பை கிரிக்கெட் தொடரில், போட்டியை நடத்தும் இங்கிலாந்தை தவிர மற்ற 9 அணிகளும் இருவிதமான நிறத்தில் சீருடையை வைத்திருக்க வேண்டும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) ஏற்கனவே அறிவுறுத்தி இருந்தது. மோதும் இரு அணிகளுக்கு ஏறக்குறைய ஒரே நிறத்தில் சீருடை இருந்தால் ரசிகர்கள் குழப்பம் அடையாமல் இருக்க ஒரு அணி வீரர்கள் மற்றொரு சீருடையை அணிந்து ஆடும்படி பணிக்கப்படுவார்கள்.
நடப்பு உலக கோப்பை தொடரில் ஐசிசி புதிய விதியை கொண்டு வந்துள்ளது. அதன்படி, ஒரு போட்டியில் ஒரே நிற ஆடைகளை அணிந்து விளையாடக்கூடாது என்றும், அப்படி விளையாடுவதால் விரர்களின் அணிகளை சரியாக கணக்கிட முடியாது என்பதாலும் சீருடை மாற்றப்படுகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விதியின்படி இங்கிலாந்து, இந்தியா, இலங்கை, ஆப்கானிஸ்தான் ஆகிய நான்கு அணிகளில் இங்கிலாந்து அணி மட்டும் தன்னுடைய சொந்த சீருடையில் விளையாட அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், மற்ற அணிகள் தங்களுக்கான சீருடையின் நிறங்களை, அவர்களே தீர்மானித்துக் கொள்ளலாம் எனவும் ஐசிசி கூறியுள்ளது.
இந்த வகையில் இந்தியா, போட்டியை நடத்தும் இங்கிலாந்துக்கு எதிராக (ஜூன் 30-ந்தேதி) மோதும் போது வழக்கமான ஊதா நிறத்துக்கு பதிலாக ஊதா நிற பின்னணியில் ஆரஞ்சு நிற சீருடையுடன் ஆடுவார்கள் என்று இந்திய கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஆப்கானிஸ்தானுக்கு எதிராகவும் இந்திய வீரர்கள் ஆரஞ்சு நிற சீருடையுடன் ஆட வேண்டி இருக்கும். இந்திய கிரிக்கெட் வாரிய மார்க்கெட்டிங் கமிட்டியின் மேற்பார்வையில் புதிய ஆரஞ்சு நிற சீருடை வடிவமைக்கப்பட்டு வருவதாகவும், இன்னும் சில தினங்களில் அது வெளியிடப்படும் என்றும் கூறப்படுகிறது.
‘டாஸ்’ போடும் வாய்ப்பு வழங்குவதற்காக ஒவ்வொரு அணிக்கும் உள்ளூர்-வெளியூர் ஆட்டங்கள் என்று பிரிக்கப்பட்டுள்ளன. உள்ளூர் அணி கேப்டனுக்கே ‘டாஸ்’ போடும் போது நாணயத்தை மேலே சுண்டி விடும் வாய்ப்பு வழங்கப்படும். இதன் அடிப்படையிலும் சீருடையில் வித்தியாசம் காட்டப்படும்.
இதேபோல் பாகிஸ்தான், வங்கதேசம், தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் பச்சை நிற சீருடையில் விளையாடி வருகின்றன.
இதில் பாகிஸ்தான் மட்டும் சொந்த சீருடையில் விளையாடலாம் எனவும், மற்ற இரு அணிகளும் பாகிஸ்தானுடன் விளையாடும்போது மாற்று நிற சீருடையில் விளையாட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.