உலகக்கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணியுடன் மோத போவது இந்த அணி தான்; நாதன் லயோன் கணிப்பு
நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டிக்கு தகுதி பெற வாய்ப்புள்ள அணிகள் குறித்தான தனது கணிப்பை ஆஸ்திரேலிய அணியின் சீனியர் வீரரான நாதன் லயோன் ஓபனாக வெளிப்படுத்தியுள்ளார்.
சர்வதேச ஒருநாள் போட்டிகளுக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. மொத்தம் 48 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இதுவரை 30 போட்டிகள் நிறைவடைந்துள்ளன.
பரபரப்பிற்கு பஞ்சம் இல்லாமல் நடைபெற்று வரும் இந்த போட்டியில் இந்தியா, தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து அணிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.
இங்கிலாந்து, பாகிஸ்தான் உள்ளிட்ட அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்துவிட்டது. அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெறுவதற்கு எஞ்சியுள்ள போட்டிகள் மிக முக்கியமானது என்பதால், அனைத்து அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடி வருகின்றன.
இந்தநிலையில், நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் குறித்து பல்வேறு விசயங்கள் பேசிய ஆஸ்திரேலிய அணியின் சீனியர் வீரரான நாதன் லயோன், இறுதி போட்டிக்கு தகுதி பெற வாய்ப்புள்ள அணிகள் குறித்தான தனது கணிப்பையும் ஓபனாக வெளிப்படுத்தியுள்ளார்.
இது குறித்து நாதன் லயோன் பேசுகையில், “உலகக்கோப்பை தொடரின் இறுதி போட்டிக்கு இந்திய அணியும், ஆஸ்திரேலிய அணியும் தகுதி பெறும் என நான் முழுமையாக நம்புகிறேன். இந்திய அணி மிக சிறப்பான விளையாட்டை வெளிப்படுத்தி வாருகிறது. இந்தியாவில் உலகக்கோப்பை தொடர் நடைபெற்று வருவதால் ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களும் இந்திய அணி இந்த முறை கோப்பையை வெல்ல வேண்டும் என்றே காத்திருப்பார்கள், இதனால் இந்திய அணி மீது அதிக அழுத்தம் ஏற்படும். இறுதி போட்டியில் ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டு அதிகமான ரன்கள் குவித்துவிட்டால் ஆஸ்திரேலிய அணியால் சாம்பியன் பட்டத்தை வெல்ல முடியும்” என்று தெரிவித்தார்.
தென் ஆப்ரிக்கா அணி குறித்து பேசிய லயோன், “தென் ஆப்ரிக்கா அணி அதிக ஆபத்தான அணியாக திகழ்ந்து வருகிறது. பந்துவீச்சை விட தென் ஆப்ரிக்கா அணியின் பேட்டிங் வலுவானதாக உள்ளது. வாண்டர் டூசன், மார்கரம், ஹென்ரிச் கிளாசன், டேவிட் மில்லர் என தென் ஆப்ரிக்கா அணியின் பேட்டிங் ஆர்டர் குறையே சொல்ல முடியாத அளவிற்கு வலுவானதாக உள்ளது” என்று தெரிவித்தார்.