பவுண்டரி, சிக்ஸ் மழைகளாக பொழிந்து சதம் விளாசினார் யஷஷ்வி ஜெய்ஸ்வால். இறுதியில் மும்பைக்கு எதிராக 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 212 ரன்கள் குவித்தது.
ஐபிஎல் வரலாற்றின் 1000ஆவது போட்டி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
இதனையடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு துவக்க வீரர்களாக யஷஷ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஜோஸ் பட்லர் இருவரும் களமிறங்கினர். பட்லர் ஆரம்பத்தில் இருந்தே தடுமாற்றத்துடன் விளையாடி வந்தார். இரண்டு பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் உட்பட 19 பந்துகளில் 18 ரன்கள் மட்டுமே அடித்து பட்லர் அவுட் ஆனார்.
அடுத்ததாக உள்ளே வந்த சஞ்சு சாம்சன் சிக்ஸ் அடித்து ஆரம்பித்திருந்தாலும் 10 பந்துகளில் 14 ரன்கள் மட்டுமே அடித்து ஆட்டமிழந்தார். தேவ்தத் படிக்கல் 2 ரன்கள், ஜேசன் ஹோல்டர் 11 ரன்கள், ஹெட்மயர் 8 ரன்கள் என ராஜஸ்தான் அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் வரிசையாக ஆட்டமிழக்க, அந்த அணி சற்று தடுமாற்றம் கண்டது.
இருப்பினும் ஒரு முனையில் நங்கூரம்போல நினைத்து நின்று தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஜெய்ஸ்வால் 30 பந்துகளில் அரைசதம் விளாசினார். இதன் பிறகும் விக்கெட்டுகள் சென்றுகொண்டே இருந்தது. ஆனாலும் தனது அதிரடியை நிறுத்தாமல் விளையாடிய ஜெய்ஸ்வால் 52 பந்துகளில் சதம் விளாசி புதிய வரலாறு படைத்தார்.
ஜெய்ஸ்வால் 62 பந்துகளில் 16 பவுண்டர்கள் 8 சிக்ஸர்கள் உட்பட 124 ரன்கள் அடித்து ஆட்டம் இழந்தார். ஐபிஎல் வரலாற்றில் இந்திய அணிக்கு விளையாடாத இந்திய வீரரால் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.
ஒரு கட்டத்தில் ராஜஸ்தான் அணிக்கு 200 ரன்கள் வருவதே சற்று கடினமான விஷயமாக இருந்தபோது, ஜெய்ஸ்வால் கடைசி சில ஓவர்கள் அதிரடியாக விளையாடிக்கொடுத்தது 200 கடக்க உதவியதோடு, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் வருவதற்கும் மிகப்பெரிய உதவியாக இருந்தது.
மும்பை இந்தியன்ஸ் அணி தனது சொந்த மைதானத்தில் 213 ரன்கள் இலக்கை கடந்து வெற்றி பெறுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். மும்பை அணி இதுவரை ஒருமுறை மட்டுமே 200 ரன்களை சேஸ் செய்து வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.