கடைசி வரை எடுத்து வந்து, கடைசி ஓவரில் பினிஷ் செய்ய இயலாமல் தோல்வியை தழுவியதற்கு காரணம் யார் என்பது குறித்து பேட்டி அளித்துள்ளார் ரோகித் சர்மா.
வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை மேற்கொண்டன. இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு பிரப்சிம்ரன்(26) மற்றும் அதர்வா(29) இருவரும் துவக்கத்தில் நன்றாக விளையாடி கொடுத்தனர். அந்த அதிரடியை அப்படியே எடுத்துச் சென்ற ஷாம் கர்ரன் மற்றும் ஹர்பிரித் சிங் ஜோடி ஐந்தாவது விக்கெட் 92 ரன்கள் சேர்த்தது.
15 ஓவர்கள் வரை 118 ரன்கள் அடித்திருந்த பஞ்சாப் அணிக்கு, 16வது ஓவரில் அர்ஜுன் டெண்டுல்கர் 31 ரன்கள் விட்டுக் கொடுத்தது திருப்புமுனையாக அமைந்தது. அதை அப்படியே எடுத்துச் சென்று 20 ஓவர்களில் 214 ரன்கள் குவித்தது பஞ்சாப் கிங்ஸ் அணி. கடைசி ஐந்து ஓவர்களில் 96 ரன்கள் அடித்தது குறிப்பிடத்தக்கது.
இந்த இலக்கை சேஸ் செய்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரோகித் சர்மா 44 ரன்கள், கேமரூன் கிரீன் 67 ரன்கள் மற்றும் சூரியகுமார் யாதவ் 57 ரன்கள் அடித்துக் கொடுத்து இலக்கை எட்ட முடியும் என்று மிகப்பெரிய நம்பிக்கையை கொடுத்தனர். ஆனால் மூவருமே கடைசி வரை நின்று பினிஷ் செய்ய முடியவில்லை.
கடைசி ஓவரில் வெற்றிக்கு 16 ரன்கள் அடிக்க வேண்டியது இருந்தது. அர்ஷ்தீப் சிங் இருபதாவது ஓவரை வீசினார். அபாரமாக வீசி இரண்டு ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து இரண்டு போல்ட் எடுத்தார்.
மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 201 ரன்கள் மட்டுமே அடித்து 13 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. கடைசி வரை எடுத்து வந்து பினிஷ் செய்ய முடியாமல் தோல்வியை தழுவிய மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேசுகையில்,
“டெத் ஓவர்களில் சரியாக செயல்படாதது ஏமாற்றம் அளிக்கிறது. இதை சரி செய்துகொள்ள வேண்டும். ஆனால் பவுலர்கள் நன்றாக செயல்பட்டதால் இதற்காக தலைகுனிய வேண்டிய எந்த தேவையும் இல்லை. அடுத்த போட்டிகளில் இதை சரி செய்து கொள்வார்கள் என்று நம்புகிறேன்.
இது போன்ற அதிக ஸ்கோர்கள் அடிக்கக்கூடிய போட்டியில் இப்படி திடீர் மாற்றங்கள் நிறைய நடக்கும். இதுவரை மூன்று தோல்வி மற்றும் மூன்று வெற்றிகளுடன் சமமாக தான் இருக்கிறோம். எந்தவித பாதிப்பும் இல்லை. அடுத்தடுத்து வரும் போட்டிகளில் கவனம் செலுத்த வேண்டும்.
கேமரூன் கிரீன் மற்றும் சூரியகுமார் யாதவ் இருவரும் பேட்டிங் செய்த விதம் மிகுந்த நம்பிக்கையை கொடுக்கிறது. மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. கடைசியாக ஃபினிஷ் செய்ய முடியவில்லை என்றாலும் அர்ஷ்தீப் சிங் செயல்பட்ட விதத்திற்கு பாராட்டுக்கள்.” என்றார்.