மீண்டும் கிரிக்கெட் ஆட வரும் யுவ்ராஜ் சிங்: பிசிசிஐக்கு அவர் அனுப்பிய அனுமதி கடிதம்?

டி20 போட்டிகளில் விளையாட அனுமதி வழங்க வேண்டும் என இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் பிசிசிஐ-க்கு கடிதம் எழுதியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் வீரரான யுவராஜ் சிங் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். மும்பை நடந்த நிகழ்ச்சியில் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார். இந்த அறிவிப்பு அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. இருப்பினும் யுவராஜ் சிங் தனது முடிவை உறுதியாக தெரிவித்துவிட்டார். அத்துடன் மிகவும் ஆழமாக சிந்தித்த பின்னரே ஓய்வு என்ற முடிவை எடுத்ததாகவும் அவர் தெரிவித்தார்.

சர்வதேச போட்டிகளில் அவர் ஓய்வை அறிவித்ததால், இனி ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவாரா ? அல்லது அதிலும் ஓய்வு பெற்றுவிடுவாரா ? ஆகிய கேள்விகள் ரசிகர்கள் உட்பட அனைவரது மத்தியிலும் நிலவி வந்தது. இந்நிலையில் இந்தக் கேள்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், டி20 தொடர்களில் விளையாடி அனுமதி வழங்குமாறு யுவராஜ் கடிதம் எழுதியுள்ளார். இதன்மூலம் அவர் ஐபிஎல் உள்ளிட்ட டி20 தொடர்களில் விளையாடுவார் எனத் தெரியவந்துள்ளது.

சர்வதேச கிரிக்கெட்டில் 18 ஆண்டுகள் நீடித்திருந்த யுவராஜ் சிங் ஓய்வு பெற்றுவிட்டார். யுவராஜ் சிங் என்றாலே ஒரே ஓவரில் விளாசிய 6 சிக்ஸர்கள், 2011 உலகக் கோப்பை நாயகன், புற்று நோயிலிருந்து மீண்டு கிரிக்கெட்டுக்கு வந்த தன்னம்பிக்கை நாயகன் போன்ற சில நினைவுகள் மட்டுமே வந்துசெல்லும். ஆனால், கிரிக்கெட்டில் யுவராஜ் சிங் இன்னும் சில அழுத்தமான தடங்களைப் பதித்திருக்கிறார்.

# சிறுவயதிலிருந்தே ஸ்கேட்டிங் வீரராக விரும்பியவர் யுவராஜ். 14-வயதுக்குட்பட்ட தேசிய ஸ்கேட்டிங்  சாம்பியன் பட்டம் வென்றவரும்கூட. அவருடைய தந்தையும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான யோக்ராஜ் சிங் கேட்டுகொண்டதால் கிரிக்கெட் பக்கம் வந்தவர்.

# ஒரு நாள் கிரிக்கெட்டில் யுவராஜ் சிங் ஜெர்சி எண் 12. அந்த எண் அவருக்கு எப்படி வந்தது? 1981-ல் சண்டிகர் செக்டர் 12 மருத்துவமனையில் டிசம்பர் (12-ம் மாதம்) 12-ம் தேதி மதியம் 12 மணிக்குப் பிறந்தவர் யுவராஜ். அந்த ராசியால் ஜெர்சி எண் 12 ஆனது.

# டி20 கிரிக்கெட்டின்  ‘சூப்பர்மேன்’ என்றழைக்கப்படும் யுவராஜ், டி20 போட்டியில் நீளமான சிக்ஸரை விளாசியவர் என்ற பெயர் எடுத்தவர். 119 மீட்டர் தொலைவுக்கு அந்த சிக்ஸரை விளாசினார்.

2007 டி20 உலகக் கோப்பைப் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் ஸ்டூவர்ட் பிராட் வீசிய 6 பந்துகளில் 6 சிக்ஸர்களை விளாசியதில் இந்த நீளமான சிக்ஸரும் அடங்கும்.

# 2008-ல் சென்னையில் இங்கிலாந்துக்கு எதிராக நடந்த டெஸ்ட்டில் 387 ரன்னை இந்தியா துரத்தியபோது யுவராஜ் சிங் சச்சின் டெண்டுல்கருடன் இணைந்து 5-வது விக்கெட்டுக்கு 163 ரன்கள் சேர்த்தது இந்தியாவின் வெற்றிக்கு உதவியது. இந்தியாவின் துரத்தலில் 5-வது விக்கெட்டுக்கு அமைந்த மிகப் பெரிய பார்ட்னர்ஷிப் இதுதான்.

# உலகக் கோப்பை வரலாற்றில் ஒரே போட்டியில் 50 ரன்களையும் 5 விக்கெட்டுகளையும் வீழ்த்திய ஒரே வீரர் யுவராஜ்தான். 2011-ல் பெங்களூருவில் அயர்லாந்துக்கு எதிராக இதைச் சாதித்தார்.

# 2011 உலகக் கோப்பையை  வெல்லக் காரணமான நாயகன் யுவராஜ். ஆரம்ப கட்ட புற்றுநோயும் ரத்த வாத்தியும் இருந்தபோதும்கூட உலகக் கோப்பையை வென்ற பிறகே சிகிச்சைக்குச் சென்றார்.

# சச்சின் டெண்டுல்கருக்குப் பிறகு புகழ்பெற்ற இங்கிலாந்தின் யார்க்‌ஷையர் கவுண்டி அணிக்கு ஒப்பந்தமான ஒரே வீரர் யுவராஜ் சிங். சில வெளிநாட்டு வீரர்களுக்கு மட்டுமே கிடைத்த பெருமையில் யுவராஜும் அடக்கம்.

# இந்தியாவில் யுவராஜ் சிங்குக்கு ஏராளமான விசிறிகள் இருக்கிறார்கள். ஆனால், யுவராஜ் சிங் சச்சின் டெண்டுல்கரின் மிகப் பெரிய விசிறி.

Sathish Kumar:

This website uses cookies.