சிட்னியில் நாளை தொடங்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி மற்றும் 4-வது போட்டிக்கான 13 பேர் கொண்ட இந்திய அணி மாற்றங்களுடன் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2 போட்டிகளில் வென்று 2-1 என்ற நிலையில் முன்னிலையில் இருக்கிறது.
இந்நிலையில், 4-வது டெஸ்ட் போட்டி நாளை சிட்னியில் நடைபெற உள்ளது.
இந்தப் போட்டியில் எப்படியாவது வென்று தொடரை சமன் செய்துவிட வேண்டும் என்கிற முனைப்பில் ஆஸ்திரேலிய வீரர்கள் தீவிரமாகப் பயிற்சியில் ஈடுபட்டு உள்ளனர். அதேசமயம், இந்திய அணி இந்த டெஸ்ட் போட்டியில் வென்றுவிட வேண்டும், அல்லது குறைந்தபட்சம் டிரா செய்ய வேண்டும் என்ற தீவிரத்தில் இருக்கிறது. ஆதலால், இரு அணிகளுக்கும் நாளைய டெஸ்ட் போட்டி முக்கியமானதாகும்.

இந்திய அணி இந்த டெஸ்ட் போட்டியில் வென்றாலோ அல்லது டிரா செய்தாலோ இந்திய அணியின் 70 ஆண்டுகால டெஸ்ட் வரலாற்றில் ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்று வரலாறு படைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
நாளை தொடங்கும் 4-வது டெஸ்ட் போட்டிக்கான 13 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது. இதில் கடந்த 3 டெஸ்ட் போட்டிகளிலும் சிறப்பாகப் பந்து வீசி 11 விக்கெட்டுகளை வீழ்த்திய இசாந்த் சர்மா நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக உமேஷ் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளார்.
ரோஹித் சர்மா தனது மனைவிக்கு குழந்தை பிறந்திருப்பதால் அவர்களைப் பார்க்க மும்பை சென்றுவிட்டதால், அவர் 4-வது டெஸ்ட் போட்டியில் பங்கேற்கவில்லை. அவருக்குப் பதிலாக கே.எல். ராகுல் சேர்க்கப்பட்டுள்ளார். கடந்த 2 டெஸ்ட் போட்டிகளிலும் 4 இன்னிங்ஸ்களிலும் மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ராகுலை ஏன் மீண்டும் எடுத்தார்கள் எனத் தெரியவில்லை. மீண்டும் ராகுலுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அஸ்வின் உடற்தகுதியில் இன்னும் முழுமையாகத் தேர்வாகவில்லை என்பதால், நாளை விளையாடும் 11 பேர் கொண்ட அணியில் கடைசி நேரத்தில் முடிவு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 13 பேர் கொண்ட அணியில் அஸ்வின் பெயர் இடம் பெற்றபோதிலும், அவர் கடைசி நேரத்தில்தான் அவர் விளையாடுவரா அல்லது ஓய்வில் அமரவைக்கப்படுவாரா என்பது தெரியவரும்.
ஆனால், இந்திய அணியின் செய்தித்தொடர்பாளர் அளித்த பேட்டியில், “ உடற்தகுதித் தேர்வில் அஸ்வின் தோல்வி அடைந்துவிட்டதால் 4-வது டெஸ்ட் போட்டியில் அவர் விளையாடமாட்டார்” என்று தெரிவித்திருந்தார் இந்தச் சூழலில் 13 பேர் கொண்ட அணியில் அஸ்வின் இடம் பெற்றுள்ளது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிட்னி மைதானம் பேட்ஸ்மேனுக்கும், சுழற்பந்துவீச்சாளர்களுக்கும் நன்கு ஒத்துழைக்கும். ஆதலால், இந்திய அணியில் கூடுதலாக பேட்ஸ்மேன் எடுக்கப்போகிறார்களா, அல்லது சுழற்பந்துவீச்சாளரை சேர்க்கப்போகிறார்களா என்பது தெரியவில்லை.

இந்திய அணி விவரம்:
விராட் கோலி(கேப்டன்), ஹனுமா விஹாரி, மயங்க் அகர்வால், சட்டேஸ்வர் புஜாரா, அஜின்கஹே ரஹானே, ரிஷாப் பந்த், கே.எல்.ராகுல், ரவிந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, உமேஷ் யாதவ், முகமது ஷமி.
India name 13-man squad for SCG Test: Virat Kohli (C), A Rahane (VC), KL Rahul, Mayank Agarwal, C Pujara, H Vihari, R Pant, R Jadeja, K Yadav, R Ashwin, M Shami, Jasprit Bumrah, Umesh Yadav
A decision on R Ashwin's availability will be taken on the morning of the Test #AUSvIND pic.twitter.com/4Lji2FExU8
— BCCI (@BCCI) January 2, 2019