ஏற்கெனவே ஐசிசி எதிர்காலப் பயணத்திட்ட அட்டவணை நெருக்கடியாக இருக்கிறது என்று வீரர்கள் தரப்பில் புகார்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில் ஆண்டுதோறும் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் ஐசிசி தரவரிசையில் டாப்பில் இருக்கும் இன்னொரு அணியுடன் சேர்த்து 4 நாடுகள் சூப்பர் சீரிஸ் ஒருநாள் தொடரை திட்டமிடுவதாக பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார்.
2021ம் ஆண்டு முதல் இந்தத் தொடர் தொடங்க வாய்ப்பிருப்பதகா கங்குலி தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே ஐசிசி-யில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இந்திய கிரிக்கெட் வாரியங்களின் செல்வாக்கு அளவுக்கு மீறி இருப்பதாக எழும் குற்றச்சாட்டுகளுக்கு இடையேயும் பணமில்லாமல் அயர்லாந்து தொடர் ஒன்றையே ரத்து செய்ததும், ஒரு டெஸ்ட் தொடரை டி20 மேட்சாக மாற்றியிருப்பதும் பற்றி கிரிக்கெட் ஆர்வலர்கள் கடும் விமர்சனம் வைத்து வரும் நிலையில், கங்குலியின் இந்தத் கனவுத்திட்டம் நிறைவேறுமா என்று தெரியவில்லை.
மேலும் இது ஐசிசி தொடர் இல்லையம், வாரியங்களுக்கு இடையேயான ஒப்பந்தத்தின் படி எதிர்காலப் பயணத்திட்டமான எஃப்டிபியின் படி அமைய வேண்டுமாம்.
கொல்கத்தாவில் கங்குலி இது தொடர்பாக கூறிய போது, “ஆஸி., இங்கிலாந்து, இந்தியா இன்னொரு டாப் அணி சேர்த்து 4 நாடுகள் சூப்பர் சீரிஸில் பங்கேற்கும். 2021-ல் இது தொடங்குகிறது. இதன் முதல் தொடர் இந்தியாவில் நடைபெறும்” என்றார்.
இத்திட்டத்தின் படி இதே தொடர் ஆஸ்திரேலியாவில் ஒன்று அக்-நவ அல்லது பிப்.- மார்ச்சில் நடைபெறும், ஆனால் கிரிக்கெட் ஆஸ்திரேலியா சேர்மன் எர்ல் ஹெடிங்ஸ், ‘நிச்சயமாக கடினம், ஏற்கெனவே ஷெட்யூல் டைட்டாக உள்ளது’ என்று கூறியுள்ளார்.
2016-2023 ஆகிய எட்டு ஆண்டுகளுக்கான கிரிக்கெட்டில் இந்தியா 293 மில்லியன் டாலர்கள் வருவாய் ஈட்டும், ஆஸ்திரேலியா 132 மில்லியன் டாலர்கள் வருவாய் இதே 8 ஆண்டுகால சுழற்சியில் ஈட்டும் என்றும் கணிக்கப்பட்டுள்ளன. ஆனாலும் இந்தியா இன்னும் கூடுதல் வருவாய் பெற தகுதியுடையதுதான் என்கிறார் கங்குலி.
இப்படியே ஐசிசி பராமுகமாக இருந்தால் கிரிக்கெட் என்பது வெறும் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவுக்கு உரியதாக மட்டுமே குறுகும், ஏற்கெனவே அசொசியேட் அணிகளை பங்கேற்க முடியாதவாறு உலகக்கோப்பையை வடிவமைத்தாகி விட்டது. இனி மற்ற இருதரப்பு தொடர்களும் இந்த ரீதியில் போனால் கிரிக்கெட்டின் எதிர்காலம் அவ்வளவுதான் என்று ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கிரிக்கெட் வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.