ஆரோன் பிஞ்ச் நாளைய போட்டியில் விளையாடுகிறார்: வார்னர்

முதல் இரண்டு போட்டிகளில் காயம் காரணமாக விளையாடாமல் இருந்த அரோன் பிஞ்ச் நாளை நடைபெறும் 3-வது போட்டியில் விளையாடுகிறார்.

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டிக்காக பயிற்சி மேற்கொள்ளும்போது தொடக்க வீரர் ஆரோன் பிஞ்சுக்கு காயம் ஏற்பட்டது.

இதனால் முதல் மூன்று போட்டிகளில் பிஞ்ச் விளையாடமாட்டார் என்று கூறப்பட்டது. தற்போது காயம் குணமடைந்ததால் நாளை இந்தூரில் நடைபெற இருக்கும் 3-வது ஒருநாள் போட்டியில் பங்கேற்பார் என்று அந்த அணியின் துணை கேப்டன் வார்னர் கூறியுள்ளார்.

இதுகுறித்து வார்னர் கூறுகையில் ‘‘ஆரோன் பிஞ்ச் வலைப்பயிற்சி மேற்கொண்டதை பார்க்கையில் சிறப்பாக இருந்தது. நாளைய போட்டியில் இடம்பெறுவதற்கான உடற்தகுதிக்கான அனைத்தையும் செய்து கொண்டிருக்கிறார்.

அவர் சிறந்த பேட்ஸ்மேன். கடந்த இரண்டு வருடங்களாக ஏராளமான போட்டிகளில் விளையாடியுள்ளார். தொடக்க வீரராக பேட்டிங் செய்யும் வகையில் அதிக அளவில் அனுபவம் பெற்றுள்ளார். மிகவும் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்’’ என்றார்.

முதல் இரண்டு போட்டிகளில் களம் இறங்கிய தொடக்க வீரர் கார்ட்ரைட் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Silambarasan Kv: Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

This website uses cookies.