டிசம்பர் முதல் பிப்ரவரி வரை நடைபெறும் ஆஸ்திரேலிய பிக்பாஷ் டி20 லீக் போட்டித் தொடரில் 360 டிகிரி வீரர் என்று செல்லமாக அழைக்கப்படும் அதிரடி தென் ஆப்பிரிக்க வீரர் ஏ.பி.டிவில்லியர்ஸ் பிரிஸ்பன் ஹீட் அணிக்காக அறிமுகமாகிறார்.
மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும் தொடராகும் இது. ஐபிஎல்-க்குப் பிறகு பெரிய வரவேற்பை பெற்ற டி20 தொடராகும் இது. இந்தத் தொடரின் பின்பாதி போட்டிகளுக்கு பிரிஸ்பன் ஹீட் அணிக்காக ஆடுகிறார் ஏ.பி.டிவில்லியர்ஸ்.
இதனையடுத்து பிரிஸ்பன் ஹீட் அணியின் பயிற்சியாளர் டேரன் லீ மேன் பெரு மகிழ்ச்சி தெரிவித்த போது, “உலகத் தரம் வாய்ந்த வீரர்கள் தினசரி உருவாவதில்லை, அதுவும் ஏ.பி.டிவில்லியர்ஸ் போன்ற ஒரு வீரர் இந்தத் தொடரில் ஆடுவது பிபிஎல் கிரிக்கெட்டில் புதிய திறமைகளை உருவாக்கும்.

இவர் 360 டிகிரி வீரர், மிகப்பெரிய திறமை, தனித்துவமான பொறுமை மற்றும் சிந்தனையுடைய ஒரு தலைவர் டிவில்லியர்ச்” என்று புகழாரம் சூட்டியுள்ளார்.
டிவில்லியர்ஸ் 114 டெஸ்ட், 228 ஒருநாள் சர்வதேச போட்டிகள் 78 டி20 சர்வதேச போட்டிகளில் ஆடியதோடு ஐபிஎல் உள்ளிட்ட லீகுகளில் எண்ணற்ற டி20 போட்டிகளை ஆடியுள்ள அசாத்திய அனுபவ வீரர்.
ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக கடந்த ஐபிஎல் தொடரில் 442 ரன்களை 44.20 என்ற சராசரியுடன் 154 என்ற அதிரடி ஸ்ட்ரைக் ரேட்டுடன் எடுத்துள்ளார் டிவில்லியர்ஸ்.

Photo by: Vipin Pawar /SPORTZPICS for BCCI
இந்நிலையில் பிரிஸ்பன் ஹீட் குறித்து அவர் கூறியதாவது, “நான் எந்த மாதிரியான கிரிக்கெட்டுடன் ஒன்றிணைய விரும்புகிறேனோ அத்தகைய கிரிக்கெட்டை ஆடும் அணியாகும் பிரிஸ்பன் ஹீட். பந்து வீச்சை அடித்து நொறுக்கக் கூடிய அணி ஆகவே பிரிஸ்பன் மைதானத்தை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன். அது ஒரு அருமையான மைதானம், கிரிக்கெட் எப்போதும் உயர்தரத்தில் இருக்கும்” என்றார் டிவில்லியர்ஸ்.