உலகக்கோப்பை தொடரில் பவுண்டரி முறையை விமர்சித்து நடிகர் அமிதாப் பச்சன், கிரிக்கெட் வீரர்கள் ரோஹித் சர்மா, யுவ்ராஜ் சிங் ஆகியோர் விமர்சித்துள்ளனர்.
இங்கிலாந்து லார்டஸ் மைதானத்தில் நடைபெற்ற உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று உலகக் கோப்பையை முதன்முறையாக வென்றது இங்கிலாந்து.
முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 241 ரன்களை எடுத்தது. 242 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய இங்கிலாந்து அணி வெற்றி பெற கடைசி பந்தில் 2 ரன்கள் தேவை என்ற போது 1 ரன் மட்டுமே எடுத்தது. இதனால் போட்டி சமனில் முடிந்தது. இதையடுத்து சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்டது.
சூப்பர் ஓவரில் முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி 15 ரன்களை எடுத்தது. 16 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய நியூசிலாந்து அணியால் 15 ரன்கள் மட்டுமே எடுத்தது. சூப்பர் ஓவரும் டிரா ஆனது. இதையடுத்து அதிக பவுண்டரிகள் அடித்த அணி என்ற அடிப்படையில் இங்கிலாந்து அணி உலகக் கோப்பையை வென்றது.
ஐசிசியின் இந்த பவுண்டரி முறையை பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.
பாலிவிட் நடிகர் அமிதாப் பச்சன் தனது ட்விட்டர் பக்கத்தில் உன்னிடம் (ஐசிசி) ஒரு 2000 ரூபாய் நோட்டு இருக்கிறது, என்னிடம் நான்கு 500 ரூபாய் நோட்டு இருக்கிறது, நம்மில் யார் பணக்காரர் என்று கேட்க, அதற்கு ஐசிசி நான்கு 500 ரூபாய் நோட்டு வைத்துள்ள நீங்கள் தான் பணக்காரர் என்று ஐசிசி சொல்வது போல் ட்வீட் செய்து கிண்டல் செய்திருந்தார்.
ஓவர் த்ரோவிற்கு 6 ரன்கள் கொடுக்கப்பட்டது நடுவர்களின் தெளிவான குழப்பம் என சர்வதேச முன்னாள் நடுவர் சைமன் டஃபெல் கூறியிருந்தார். மேலும் ஐசிசி விதிப்படி 5 ரன்கள் தான் கொடுத்திருக்க வேண்டுமென்றும் கூறியிருந்தார்.