இங்கிலாந்தின் முன்னணி வேகப்பந்துவீச்சாளராக திகழ்பவர் ஜேம்ஸ் ஆண்டர்சன் (வயது 35). இவருக்கு தற்போது ஏற்பட்டுள்ள தோள்பட்டை காயம் காரணமாக இந்தியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இங்கிலாந்து அணியின் பலமாக இருக்கும் இருக்கும் ஆண்டர்சன், கடந்த ஓராண்டாக சிறந்த ஃபார்மில் இருக்கிறார். 138 டெஸ்ட் போட்டிகளில் 540 விக்கெட்களை அவர் வீழ்த்தியுள்ளார். இவர், அடுத்து நடக்க இருக்கும் நான்கு நாள் போட்டியில் இருந்து விலகியுள்ளார்.
சமீபகாலமாக ஆண்டர்சனுக்கு அதிகளவிலான தோள்பட்டை காயங்கள் ஏற்பட்டு வருகின்றன. இதை அவ்வப்போது தகுந்த சிகிச்சையால் சரிசெய்து வருகிறார். இதனிடையே ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற ஆஷஸ் தொடரில் மொத்தம் 223.3 ஓவர்கள் வீசியுள்ளார். இரு அணிகளின் வேகப்பந்துவீச்சாளர்கள் வீசிய ஓவர்களில் இதுவே அதிகம்.
இதனால் அவரின் காயம் தீவிரமடைந்துள்ளது. எனவே அடுத்த 6 வார காலத்துக்கு ஓய்வு எடுக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அதுபோல சரியாக இதே இடைவேளைக்குப் பிறகு இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரும் தொடங்கவுள்ளது.
கடந்த 2014-ஆம் ஆண்டு இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார். எனவே, காயம் குணமாகும் வரை ஓய்வில் இருக்குமாறு இங்கிலாந்து அணியின் தலைமைப் பயிற்சியாளர் டிரவர் பெய்லிஸிஸ் தெரிவித்துள்ளார்.
நீண்ட நாட்களாக அவருக்கு இருக்கும் தோள்பட்டை காயம் காரணமாக, அடுத்த ஆறு வாரங்களுக்கு ஆண்டர்சன் ஓய்வு எடுக்க உள்ளார். புனர்வாழ்வு மையத்தில் தனது ஓய்வு காலத்தை செலவிட இருக்கும் ஆண்டர்சன், இந்தியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்குள் மீண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவுக்கு எதிரான தொடரில் விளையாட அவர் முழு தகுதியுடன் உள்ளாரா என்பது தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இந்திய டெஸ்ட் போட்டிக்காக அவர் முழு உடற்தகுதி பெற வேண்டியது அவசியமாகும் என்று பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.

காயம், ஓய்வு காரணமாக ஆன்டர்சனால் முழு தகுதி பெற முடியாமல் போகலாம் என்று கூறப்படுகிறது. இதனால், இந்தியாவுக்கு எதிரான போட்டியில் அவர் விளையாடுவதற்கான வாய்ப்பு கொஞ்சம் குறைந்துள்ளது என்பதே உண்மை.
வருகிற ஆகஸ்ட் 1-ஆம் தேதி தொடங்கி இந்தியாவுக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.