இந்திய அணியின் தொடருக்காக, போக்குவரத்து விதிகளில் தளர்வு செய்ய ஆஸ்திரேலிய அரசு சம்மதம் தெரிவித்துள்ளதாக தெரிகிறது.
இந்திய அணி வரும் அக்., மாதம் ஆஸ்திரேலியா செல்கிறது. இங்கு ‘டுவென்டி–20’ தொடர், ‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடரில் பங்கேற்கும். அடுத்து ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (வரும் டிச.,– 2021 ஜன.,) பங்கேற்கிறது.
ஆனால் கொரோனா தொற்று காரணமாக ஆஸ்திரேலியாவில் வரும் செப். 30 வரை அனைத்து எல்லைகளும் மூடப்பட்டுள்ளன. இது மேலும் நீட்டிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலக கோப்பை உள்ளிட்ட தொடர்கள் திட்டமிட்டபடி நடக்குமா என சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே பல்வேறு போட்டிகள் ரத்தானதால் பெரும் நிதி நெருக்கடியில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் போர்டு (சி.ஏ.,) சிக்கித் தவிக்கிறது. இந்த நிதியாண்டில் ரூ. 2,407 வரை வருமானம் திரட்ட சி.ஏ., திட்டமிட்டுள்ளது.
ஒருவேளை இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் ரத்தானால் ரூ. 1,444 கோடி வரை இழப்பை எதிர்கொள்ள நேரிடும். ரசிகர்கள் போட்டியை காண வரவில்லை என்றால் ரூ. 241 கோடி மட்டும் தான் இழப்பு ஏற்படும். இதனால் ரசிகர்கள் இல்லாமல் தொடரை நடத்த திட்டமிட்டுகிறது.
தவிர விளையாட்டு போட்டிகளை மீண்டும் துவக்க தேவையான ஏற்பாடுகள் செய்யப்படும் என ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்துள்ளார்.
இதனால் இந்திய அணி ஆஸ்திரேலியா வருவதற்காக, போக்குவரத்து விதிகளில் தளர்வு செய்யப்படும் எனத் தெரிகிறது. இதுகுறித்து சி.ஏ., வெளியிட்ட அறிக்கையில்,‘அதிக வருமானம் தரும் இந்திய தொடரை பொறுத்தவரையில் அரசு தரப்பில் சாதகமாக தகவல்கள் கிடைத்தது எங்களுக்கு ஊக்கமாக உள்ளது,’ என தெரிவித்துள்ளது.ஒ