உலகக் கோப்பை தொடரில், இந்தியாவுக்கு எதிரான போட்டியின்போது, ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் சென்சார் கருவி பொருத்திய ’பேட்’டை பயன்படுத்தினார்.
உலக கோப்பை கிரிக்கெட்டில், இந்தியா- ஆஸ்திரேலிய அணிகள் நேற்று மோதின. இதில் முதலில் ஆடிய இந்திய அணி, 5 விக்கெட் இழப்புக்கு 352 ரன் குவித்தது. ஷிகர் தவான் 117 ரன்னும் விராத் கோலி 82 ரன்னும் ரோகித் சர்மா 57 ரன்னும் எடுத்தனர். பின்னர் ஆடிய ஆஸ்திரேலிய அணி, 50 ஓவர் முடிவில் 316 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்து 36 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. அந்த அணியில், ஸ்மித் 69 ரன், அலெக்ஸ் கேரி 55, டேவிட் வார்னர் 56 ரன் எடுத்தனர். இந்த போட்டியின்போது, டேவிட் வார்னர், சென்சார் கருவி பொருத்திய ‘பேட்’டை பயன்படுத்தியுள்ளார்.

பேட் சென்ஸ் (Bat Sense) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ’பேட்’டை பெங்களூரைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று தயாரித்துள்ளது. இதன் மூலம் பந்துகளின் வேகத்துக்கு ஏற்ப எவ்வாறு பேட்டை கொண்டு செல்கிறோம், பேட்டின் அசைவு, எந்த திசையில் அடிக்கிறோம், பேட்டில் பந்துகள் மோதும் வேகம் ஆகியவற்றைத் துல்லியமாகக் கணக்கிட்டு அதற்கேற்ற மாதிரி ஆட முடியும்.

இதுபோன்ற பேட்டை பயன்படுத்த ஐசிசி, 2017ம் ஆண்டு அனுமதி அளித்துவிட்டது. அதை வார்னர் தமது பேட்டின் கைப்பிடி பகுதியில் பொருத்தி உள்ளார். இந்தக் கருவியை கொண்டு பும்ரா போன்ற சிறந்த பந்துவீச்சாளர்களின் பந்தின் நுணுக்கங்களை தெரிந்துகொண்டு ஆட திட்டமிட்டலாம்.
வார்னர் போன்று வேறு யாரும் இந்த கருவியை பயன்படுத்தவில்லை என்று கூறப்படுகிறது
மேலும்,
இந்தப் போட்டியின் போது, ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஜம்பா 6 ஓவர்களில் 50 ரன்களை கொடுத்தார். அவருக்கு விக்கெட் கிடைக்கவில்லை. இந்த ஆட்டத்தின் போது ஜம்பாவின் சில நடவடிக்கைகள் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொரு ஓவரிலும் பந்து வீசுவதற்கு முன்பாக, அவர் தன் பேன்ட் பாக்கெட்டுக்குள் கை விட்டு ஏதோ ஒன்றை எடுத்து பந்தின் மீது வைப்பது போன்று காட்சிகள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவம் சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது.
கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய வீரர்கள் வார்னர், சுமித், பான்கிராப்ட் ஆகியோர் பந்தை சேதப்படுத்திய பிரச்னையில் சிக்கி, தடையை அனுபவித்த நிலையில், ஜம்பாவின் நடவடிக்கை, மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.