ஆபரேசனுக்குப் பிறகு பேட்டிங் செய்வது கடினம்: ரோகித் சர்மா சொல்கிறார்

நான் பேட்டிங் செய்வது எளிதாக இருப்பதாக தோனும், ஆனால் மிகப்பெரிய ஆபரேசனுக்குப் பிறகு மிகக்கடினம் என்பது எனக்குதான் தெரியும் என ரோகித் சர்மா கூறியுள்ளார்.

இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் தொடக்க வீரராக ரோகித் சர்மா களம் இறங்கி வருகிறார். ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இரண்டு முறை இரட்டை சதம் அடித்த ஒரே வீரர் இவர்தான். தனது அபார பேட்டிங்கால் தொடர்ந்து இந்திய அணியில் தொடக்க வீரராக களம் இறங்கி வருகிறார்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நியூசிலாந்திற்கு எதிராக விளையாடும்போது தொடைப் பகுதியில் காயம் (hamstring injury)  ஏற்பட்டது. காயத்தின் வீரியம் அதிகமாக இருந்ததால் லண்டன் சென்று ஆபரேசன் செய்து கொண்டார். இதனால் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை சர்வதேச போட்டிகள் உள்பட எந்த கிரிக்கெட் தொடரிலும் விளையாடவில்லை.

பின்னர் ஐ.பி.எல். தொடர் நடைபெற்றது. தனது காயத்தில் இருந்து மீண்டும் கிரிக்கெட்டிற்கு திரும்ப இந்த தொடரை வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டார். அதன்பின் சாம்பியன்ஸ் டிராபி, இலங்கை தொடரில் விளையாடி 3 சதங்கள் விளாசியுள்ளார்.

என்னுடைய ஆட்டத்தை பார்க்க ரசிகர்களுக்கு எளிதாக இருக்கும், ஆனால், அது எவ்வளவு கஷ்டம் என்பது எனக்குத்தான் தெரியும் என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து ரோகித் சர்மா கூறுகையில் ‘‘காயத்தில் இருந்து குணமாகி மீண்டும் களம் இறங்குவது எளிதான காரணமல்ல. பெரிய அறுவை சிகிச்சைக்குப்பின் உடலுக்குள் ஆட்டி வதைக்கும் பிசாசுகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது மிகக்கடினம். இது எல்லாம் மனநிலையைப் பொறுத்தது. எனது பேட்டிங் ரசிகர்கள் பார்ப்பதற்கு எளிதாக இருக்கலாம். ஆனால், அது அவ்வளவு எளிதல்ல என்ற உண்மை எனக்கு மட்டும்தான் தெரியும்.

ஐ.பி.எல். தொடரில் களம் இறங்கும்போது இந்த நிலைமை எனக்கு ஏற்பட்டது. மும்பை இந்திய அணிக்காக களம் இறங்கும்போது, எனக்கு காயம் ஏற்பட்டால் என்ன நிகழும் என்பது குறித்து நான் நினைத்து பார்க்கவில்லை.

இந்தியாவிற்காக நான் விளையாடிக் கொண்டிருக்கும்போது, குறிப்பாக பேட்டிங் செய்யும்போது மனது திறந்திருக்கும். எந்தவிதமான எதிர்மறையான சிந்தனை இருக்காது’’ என்றார்.

Silambarasan Kv: Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

This website uses cookies.