மே 29-இல் இருதரப்புத் தொடரைப் பற்றி விவாதிக்க பிசிசிஐ மற்றும் பிசிபி கூடுகிறது

8வது சாம்பியன்ஸ் ட்ராப்பி தொடங்க இன்னும் ஒரு வாரம் கூட இல்லை. ஜூன் 4-ஆம் தேதி உலகமே எதிர் பார்க்கும் பெரிய போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இதற்கு முன் 2015-இல் இருந்து 2023-க்குள் நடக்கும் இருதரப்பு தொடரை பற்றி விவாதிக்க இந்திய கிரிக்கெட் வாரியம் மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மே 29-ஆம் தேதி அன்று கூடுகிறது.

இரு நாட்டிற்கும் உள்ள அரசியல் பிரச்சனையால் இந்திய கிரிக்கெட் அணியை பாகிஸ்தான் அணியுடன் விளையாட அனுமதிக்க வில்லை. இதனால் 2015-இல் விளையாடவேண்டிய தொடர் நின்று விட்டது. 2017-இல் விளையாடவேண்டிய தொடரும் நடக்காது என தெரிகிறது.

இந்த மாதத்தின் தொடக்கத்தில், 2015-இல் நடக்க வேண்டிய தொடர் நடக்காததால், அதற்கான இழப்பை தரவேண்டும் என இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. பிசிசிஐ தரப்பில் செயலாளர் அமிதாப் சவுதாரியும் பிசிபி தரப்பில் தலைவர் ஷஹர்யார் கான் ஆகியோர் கூடுவார்கள் என எதிர்பார்க்க படுகிறது.

“நாங்கள் விளையாடுவதற்கு தயார், ஆனால் நிலைமை மாற வில்லை. இந்திய அரசு அனுமதித்தால் தான் எங்களால் விளையாட முடியும். பிசிபி எங்களுக்கு அனுப்பியதை, நாங்கள் இந்திய அரசுக்கு அனுப்பிவிட்டோம். அவர்களின் பதிலுக்காக காத்திருக்கிறோம்,” என சவுதாரி கூறினார்.

ஆனால், ஐசிசி தொடர்களில் இரண்டு அணிகளும் மோதுவது தொடர்ந்து கொண்டு இருக்கிறது. கடைசியாக இரண்டு அணியும் 2016 டி20 உலக கோப்பையில் கொல்கத்தா மைதானத்தில் மோதியது.

Silambarasan Kv: Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

This website uses cookies.