திறமைக்கும் வயதிற்கும் தொடர்பில்லை என்கிறார் பிராவோ

சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் ஆல் ரவுண்டர் டிவைன் பிராவோ, தோனி மற்றும் கெயில் ஆகிய சீனியர் வீரர்களின் அதிரடி ஆட்டத்தினை வெகுவாக பாராட்டியுள்ளார்.

சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி இந்த ஆண்டு ஐ.பி.எல்.இன் முதல் தோல்வியை (15/04/18) பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெற்றது. சி.எஸ்.கே. அணி அந்த போட்டியில் 197 ரன்களை சேஸ் செய்வதை 4 ரன்களில் தவறவிட்டது.

அந்த போட்டியில் தோனி தனது முதுகுவலியைக் கூட பொருட்படுத்தாமல் சி.எஸ்.கே. அணியை வெற்றியின் விளிம்பு வரை கொண்டு சென்றார். அவர் அந்த போட்டியில் ஆட்டமிழக்காமல் 44 பந்துகளில் 79 ரன்களை விளாசினார்.

கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், கடந்த இரு போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற்றதைப்போல, இந்த போட்டியிலும் வெற்றி பெற்றுவிடலாம் என்று நினைத்த சி.எஸ்.கே. அணி வெற்றிக்கு மிக அருகில் சென்று தோல்வியைத் தழுவியது. பஞ்சாப் அணியின் மோஹிட் ஷர்மா சிறப்பாக பந்துவீசி பஞ்சாப் அணிக்கு த்ரில் வெற்றியை பெற்றுத்தந்தார்.

சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் அம்பத்தி ராயுடு(49) மற்றும் ஜடேஜா(19) ஆகியோரும் அணியை வெற்றி பெறவைக்க போராடினர்.

இருந்தபோதிலும் முன்னதாக பேட் செய்த பஞ்சாப் அணியின் துவக்க வீரர்களான கெயில்(66) மற்றும் கே.எல்.ராகுல்(37) அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். இதனால் அந்த அணி 20 ஓவர்களில் 197 ரன்களை குவித்தது. பஞ்சாப் அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சரியாக சோபிக்காததால் அந்த அணியினால் 200 ரன்களுக்கு மேல் குவிக்க முடியாமல் போயிற்று.

தோனி களம் இறங்கும்போது கே.கே.ஆர். ஆட்டத்தின் ஹிரோவான சாம் பில்லிங்க்ஸ் வெளியேறி இருந்தார். இருந்தாலும் தோனி மெதுவாக ரன்களை சேர்க்க ஆரம்பித்து, பிறகு தனது வழக்கமான அதிரடி ஆட்டத்தின் மூலம் ரன்களை குவித்தார். பஞ்சாப் அணியின் அனைத்து பந்து வீச்சார்களையும் அடித்து ஆடினார்.

முன்னதாக, பஞ்சாப் அணியின் துவக்க வீரர்களான கெயில் மற்றும் ராகுல் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 96 ரன்களை குவித்து அதிரடி காட்டினர். கெயில் இந்த ஐ.பி.எல். சீசனில் தனது முதல் ஆட்டத்தில் விளையாடி கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்து அளித்தார். கெயில் இந்த போட்டியில் வாணவேடிக்கைகள் காட்டி போட்டியை தெறிக்கவிட்டார். சி.எஸ்.கே பந்து வீச்சாளர்களை துவம்சம் செய்தார் என்று தான் கூற வேண்டும். இந்த கெயில் புயல் 33 பந்துகளில் 63 ரன்களை குவித்து பஞ்சாப் அணியின் வெற்றிக்கு வித்திட்டது.

மேட்ச் முடிந்த பிறகு பிராவோ தனது இன்ஸ்டக்ராம் பக்கத்தில் தோனி மற்றும் கெயில் இருவரையும் வெகுவாக புகழ்ந்துள்ளார்.

“எங்களுக்கு இந்த போட்டியின் முடிவு முக்கியம் இல்லை, சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய நமது கேப்டன் தோனி, யுனிவர்ஸ் பாஸ் கெயில் ஆகிய இருவரும், அவர்களின் வயதை பற்றி பேசியவர்களுக்கு, அவர்கள் தாங்கள் எப்பொழுதும் சிறந்த வீரர்கள் என்று நிருபித்துள்ளனர்”. என்று குறிப்பிட்டுள்ளார்.

T Aravind:

This website uses cookies.