கேப்டன் பெயரெல்லாம் சும்மாதான். தரமான அணி இருப்பதாலும், சிறப்பான பந்துவீச்சாளர்களும் கிடைத்ததால் வந்த பெயர்தான் சிறந்த கேப்டன் என்று இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்தார்.
மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் இந்திய அணி வென்றது. இதன் மூலம் தோனியின் தலைமையில் இந்திய அணி 27 வெற்றிகளைப் பெற்றதைக் காட்டிலும் கோலி தலைமையில் இந்திய அணி 28 வெற்றிகளைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.
இந்த வெற்றி குறித்து கேப்டன் கோலி நிருபர்களிடம் கூறியதாவது:
“வெற்றிகரமான கேப்டன், கேப்டன் என்ற வார்த்தை எல்லாம் பெயருக்கு முன்னால் இருக்கும் ஒரு வார்த்தைதான், அது சும்மா. சாதாரண வார்த்தை. ஒட்டுமொத்த அணியின் கூட்டு உழைப்பால் இந்தப் பெயர் எனக்குக் கிடைத்துள்ளது. சிறந்த அணி எனக்குக் கிடைத்ததால், அதன் மூலம் நல்ல பெயர் எனக்குக் கிடைத்தது. இதை நேர்மையாக ஒப்புக்கொள்கிறேன். இதுபோன்ற சிறந்த பந்துவீச்சாளர்கள் இல்லாவிட்டால், சிறப்பான வெற்றிகள் எங்களுக்குச் சாத்தியமில்லை.

நாம் எவ்வளவு வேண்டுமானாலும் அதிகமான ரன்கள் அடிக்கலாம். ஆனால், முகமது ஷமியின் இன்றைய பந்துவீச்சு, பும்ராவின் அபாரமான பவுன்ஸர் வீச்சு, இசாந்த்தின் நெஞ்சைத் தொடும் பந்துவீச்சு ஆகியவை வெற்றிக்குக் காரணங்கள். பந்துவீச்சாளர்கள் இல்லாவிட்டால் வெற்றி சாத்தியமில்லை. வெற்றிக்கு முழுமையான பொறுப்பு அணி வீரர்கள்தான்.
ஹனுமா விஹாரி இந்தத் தொடரில் கண்டுபிடிக்கப்பட்ட சிறந்த பேட்ஸ்மேன். இந்த ஆடுகளத்தைப் பயன்படுத்தி சிறப்பாக பேட் செய்தார். விஹாரியின் பேட்டிங்கைப் பார்த்து ஓய்வறையில் ஒருவகையான அமைதி நிலவியது. அந்த அளவுக்கு தரமான முதல்தரமான பேட்டிங்கை விஹாரி வெளிப்படுத்தினார்.

தன்னுடைய பேட்டிங்கை அதிகமாக தரம் உயர்த்திக்கொள்ள விஹாரி விரும்புகிறார். தவறுகளை ஏற்றுக்கொள்கிறார், சரி செய்வதற்கு ஆர்வமாக இருக்கிறார். இளம்வயதில் இருக்கும் விஹாரிக்கு சிறந்த எதிர்காலம் இருக்கிறது, அதனால்தான் அவரை அணிக்குள் எடுத்திருக்கிறோம்”.
இவ்வாறு கோலி தெரிவித்தார்.