டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி இந்திய அணிக்கு எவ்வளவு முக்கியமோ அவரைப்போலவே சட்டேஸ்வர் புஜாரா முக்கியம் என இந்தியாவின் முன்னாள் வீரர் சவுரவ் கங்குலி கூறியுள்ளார். .
இதுகுறித்து அவர் கூறியதாவது..
இந்திய அணி ஆஸ்திரேலியாவில் தொடரை வெல்ல கிட்டத்தட்ட நெருங்கிவிட்டது. இந்த போட்டியில் இந்திய அணி தோற்கும் என நான் நினைக்கவில்லை. கண்டிப்பாக வெற்றி பெற்றுவிடும். இந்த வெற்றிக்கு சட்டேஸ்வர் புஜாரா சதம் உறுதுணையாக இருக்கும். இந்த சதம் பல ஆண்டுகள் நிலைத்திருக்கும் .விராட் கோலி இந்திய அணிக்கு எவ்வளவு முக்கியமோ அதைப் போலவே சட்டேஸ்வர் புஜாரா டெஸ்ட் போட்டிகளில் மிகவும் முக்கியம் என்று கூறியுள்ளார் சவுரவ் கங்குலி.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது டெஸ்டில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட் இழப்புக்கு 622 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்துள்ளது. புஜாரா 193 ரன்களில் ஆட்டமிழந்தார். விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் 159 ரன்கள் எடுத்து அசத்தியுள்ளார்.
அடிலெய்டில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்திலும், பெர்த்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்டில் ஆஸ்திரேலியா 146 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன. நான்காவது டெஸ்ட் சிட்னியில் நேற்று தொடங்கியுள்ளது. முதல் நாள் முடிவில் இந்திய அணி 90 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 303 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் இருந்தது. புஜாரா 130, விஹாரி 39 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள்.
இன்றும் இந்திய அணி சிறப்பாக விளையாடி ஆஸ்திரேலிய அணியின் வெற்றி வாய்ப்பைப் பின்னுக்குத் தள்ளியது. மிகவும் நம்பிக்கையுடன் விளையாடிய விஹாரி, 42 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன்பிறகு புஜாராவும் ரிஷப் பந்தும் இந்திய அணியின் ரன் வேட்டையைத் தொடர்ந்தார்கள். அதிக ஓவர்கள் ஆடவேண்டும் என்று இந்திய அணி திட்டமிட்டிருந்ததால் ரிஷப் பந்த் பக்குவமாக விளையாடினார். தடுப்பாட்டத்திலும் கவனம் செலுத்தினார். உணவு இடைவேளையின்போது இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 389 ரன்கள் எடுத்தது.
இதன்பிறகு, புஜாராவின் இரட்டைச் சதத்தை அனைவரும் எதிர்பார்த்தார்கள். ஆனால் அவர் 193 ரன்களில் ஆட்டமிழந்தார். லயன் அவர் விக்கெட்டை வீழ்த்தினார். அப்போது இந்திய அணியின் ஸ்கோர் – 418. இதனால் இந்திய அணி 500 ரன்களுக்குள் ஆட்டமிழந்து விடும் என எதிர்பார்க்கப்பட்டது.
ரிஷப் பந்த் 137 பந்துகளில் சதத்தைப் பூர்த்தி செய்தார். ஆஸ்திரேலியாவில் சதமடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்கிற பெருமையையும் பெற்றார். இந்திய அணி 149-வது ஓவரில் 500 ரன்களைக் கடந்தது. இவர்கள் இருவரும் ஆடிய ஆட்டம் இந்திய ரசிகர்களை மிகவும் குஷிப்படுத்தும் விதமாக அமைந்தது.
அட்டகாசமாக விளையாடிய ரிஷப் பந்த் 185 பந்துகளில் 150 ரன்களைப் பூர்த்தி செய்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் இரண்டாவது அதிகபட்ச ரன்கள் எடுத்த விக்கெட் கீப்பர் என்கிற பெருமையும் பந்துக்குக் கிடைத்துள்ளது (தோனி 224 ரன்கள் எடுத்துள்ளார்). மேலும் ஆஸ்திரேலியாவில் அதிக ரன்கள் எடுத்த வெளிநாட்டு விக்கெட் கீப்பர்களிலும் பந்துக்கு இரண்டாம் இடம் கிடைத்துள்ளது. (டிவில்லியர்ஸ் 2012-ல் பெர்த்தில் 169 ரன்கள் எடுத்தார்.)
இந்திய அணி ஜடேஜாவின் சதத்துக்காகக் காத்திருந்தது. ஆனால் அவர் 81 ரன்களில் லயன் பந்துவீச்சில் போல்ட் ஆனார். இதனால் 167.2 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 622 ரன்கள் எடுத்த நிலையில் முதல் இன்னிங்ஸ் ஆட்டத்தை டிக்ளேர் செய்தது இந்திய அணி. ரிஷப் பந்த் 159 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ரிஷப் பந்த் – ஜடேஜா கூட்டணி 7-வது விக்கெட்டுக்கு 224 பந்துகளில் 204 ரன்கள் எடுத்து இந்திய அணி ஆதிக்கம் செலுத்த கூடுதலாக உதவியுள்ளது.